டிகேஎஸ் இளங்கோவன் இப்படிப் பேசுவது இது முதல் முறையல்ல!
Recommended Video

சென்னை: டிகேஎஸ் இளங்கோவன் கட்சித் தலைமைக்கு முரணாக பேசுவது இது முதல் முறையல்ல. ஆனால் இந்த முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று அதிரடி காட்டியுள்ளது கட்சியினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிகிறது.
டிகேஎஸ் இளங்கோவன் நீண்ட காலமாக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தார். இடை இடையே இவரது பேச்சுக்கள் கட்சித் தலைமைக்கு பிடிக்காமல் போயுள்ளன. இது புதிதல்ல.
ஏற்கனவே கருணாநிதி இருந்த சமயத்திலும் இதுபோல பேசி அவரிடம் அதிருப்தியைச் சம்பாதித்துள்ளார் இளங்கோவன். ஆனால் இந்த முறை மு.க.ஸ்டாலின் சற்று அதிரடி காட்டியுள்ளார்.
[அந்த ஒரு பேட்டி.. கட்சி பொறுப்பில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிக்கப்பட என்ன காரணம்?]

ஸ்டாலின் உத்தரவு
கருணாநிதிக்கு பிறகு அழகிரி தலைதூக்க நினைத்து ஏதேதோ பேசினார். அதில் குறிப்பாக தான் மீண்டும் திமுகவுக்கு வருவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்றார். இதனால் திமுக தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் அழகிரியின் பேச்சுகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் டிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் நடந்த கூட்டத்தில் அழகிரி குறித்து பேசியது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

தேதி முடிவு செய்யப்படவில்லை
அது போல் கருணாநிதி சிலை திறப்பு விழா எப்போது நடைபெறும் என்ற தேதியை திமுக தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவை நவம்பர் 15ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். விழாவுக்கு சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று கூறினார்.

சந்தேகமே
அதேபோல திமுக -காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பேச்சுகள் அடிப்படுகின்றன. எனினும் இரு கட்சியினரும் அது குறித்து வாய் திறக்காமல் உள்ளனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது சந்தேகமே என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியது திமுக தலைமைக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

ஜெ.வை போல் ஸ்டாலின்
இந்த நிலையில்தான் தற்போது செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இளங்கோவன். ஆனால் கட்சித் தலைமைக்குப் புறம்பாக இளங்கோவன் பேசுவது என்பது புதிதல்ல. கடந்த 2015-ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிய டிகேஎஸ் இளங்கோவன் 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார்.

கருணாநிதியிடம் மன்னிப்பு
கட்சித் தலைவர் கருணாநிதி இதனால் பெரும் அதிருப்தி அடைந்தார். கூட்டணி குறித்து பேசியது இளங்கோவனின் கருத்து அவருடைய சொந்த கருத்து என்று திமுக தலைமை விளக்கியது. இதையடுத்து கருணாநிதிக்கு இளங்கோவன் மன்னிப்பு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தற்போது மறுபடியும் வாய் தவறிப் பேசி பதவியை இழந்துள்ளார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications