போட்டுப் பார்த்தும் இறங்கி வராத திமுக.. தமாகாவின் அதிரடி முடிவுக்கு இதுதான் காரணம்..!
- கோயா
சென்னை: திமுக தரப்பை தன் பக்கம் இழுக்க ஆழம் பார்த்தும் கூட அது வேலைக்கு ஆகாமல் போனதால்தான் தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவுடன் பேசும் முடிவுக்கு வந்ததாம்.
மூப்பனார் மகன், காவிரி டெல்டாவிலும் இதர பகுதிகளிலும் ஓரளவுக்கு இன்னும் ஆதரவு உள்ளது என்ற காரணத்தாலும் ஜி.கே.வாசன் மீது அரசியல் கட்சிகளிடையே சின்னதாக ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையில் இந்த தேர்தலிலும் கூட அவரை கூட்டணிக்குள் சேர்க்க சில கட்சிகள் முயன்று வந்தன.
அமமுக முயற்சி செய்தது. அதிமுக முயற்சித்தது. ஆனால் திமுக தரப்பு அமைதியாக இருந்தது. காரணம், வாசனை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. ஸ்டாலின் விரும்பினாலும் கூட காங்கிரஸ் கட்சிக்குப் பிடிக்காத காரணத்தால் அவர் அமைதி காத்து வந்தார்.
மதுரையில் சந்திப்பு
இந்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்களுடன் தமாகா பேச்சுவார்த்தையில் இறங்கியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் உடனடியாக அதை அக்கட்சி மறுத்து அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் மதுரையில் திடீரென துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசியுள்ளார். கூடவே பாஜகவின் முரளிதரராவும் இருந்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் சைக்கிள்
இந்த சந்திப்பின் மூலமாக அதிமுக கூட்டணிக்குள் தமாகா வருவது உறுதியாகி விட்டது. அன்று அவசரம் அவசரமாக மறுத்த தமாகா இன்று கப்சிப்பென அங்கு போனது ஏன் என்று புரியவில்லை. இதுதொடர்பாக தமாகா பக்கம் விசாரித்துப் பார்த்தோம்.
வாசனின் விருப்பம் இதுதான்
அப்போது நீண்ட பிடிவாதத்திற்குப் பின்னர் அவர்கள் நம்மிடம் கூறுகையில், உண்மையில் திமுக பக்கம் போகவே வாசன் விரும்பினார். ஆனால் ஞானதேசிகன் அதிமுகவை விரும்பினார். திமுகவின் கடைக்கண் பார்வை பட வேண்டும் என்பதற்காவே அதிமுகவுடன் பேச்சு என்று வந்த செய்தியை வாசன் உத்தரவின் பேரில் தமாகா உடனடியாக மறுத்தது.
வாசனுக்கு ஏமாற்றம்
அப்படி மறுத்தும் கூட திமுக தரப்பு தன்னைத் திரும்பிப் பார்க்கவில்லை என்பது வாசனுக்கு பெரும் ஏமாற்றமாகிப் போனது. இதற்கு மேலும் அமைதி காத்தால் சரியாக வராது என்ற எண்ணத்தில்தான் அதிமுக பக்கம் போக முடிவு செய்தார். நாங்களும் வேறு என்னதான் செய்வது என்று கூறினார் அவர்.
அதுவும் சரிதான்.