"40 வயதுக்கும் கீழ்.. 90% பேர்.. " அடுத்தடுத்து ஆட்சியர்கள் டிரான்ஸ்பர்.. பின்னணியில் முக்கிய காரணம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக மாவட்ட ஆட்சியர்கள் பலர் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான ஒரு காரணம் உள்ளது.
பொதுவாக ஒரு மாநிலத்தில் தேர்தலுக்கு பின் புதிய அரசு பொறுப்பேற்றால், மாநிலம் முழுக்க நிர்வாகிகள், செயலாளர்கள், ஆட்சியர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம். முந்தைய அரசுக்கு நெருக்கமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஓரம்கட்டப்படுவதும், தங்களுக்கு நெருக்கமாக உள்ள அதிகாரிகளுக்கு பதவி கொடுப்பதும் இயல்பாக நடப்பதுதான்.
இந்தியா முழுக்கவே எல்லா மாநிலங்களிலும் நடக்கும் விஷயம்தான் இது. ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியர்கள் மாற்றப்பட்டு இருக்கும் விதம்தான்.. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டி உள்ளது.

எப்படி
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 95% மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மாற்றப்பட்டுவிட்டார்கள். முன்பு பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்களாக இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலருக்கு, மாவட்ட ஆட்சியர் பதவி வழங்கப்படாமல், அவர்களுக்கு வெவ்வேறு துறைகளில் இயக்குனர், செயலாளர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் பலருக்கு மீண்டும் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு கொடுக்காமல், வெவ்வேறு துறைகளில் போஸ்டிங் போடப்பட்டுள்ளது.

உதாரணம்
உதாரணமாக நேற்று தமிழ்நாட்டில் 54 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக 24 மாவட்டங்களில் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று செய்யப்பட மாற்றங்களில் சில டிரான்ஸ்பர் பெரிய அளவில் கவனம் பெற்றது.உதாரணமாக ஜெ.விஜயராணி - சென்னை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் ஆதி திராவிடா் வீட்டு வசதித் துறை மேலாண் இயக்குநராக இருந்தவர்.

முக்கிய துறைகள்
சிமெண்ட் மேலாண் இயக்குனராக இருந்த எம்.ஆா்த்தி - காஞ்சிபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். முக்கிய துறை தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் - தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். கே.வி.முரளிதரன் - தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கரூா் ஆட்சியராக டி.பிரபுசங்கா் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு ஆட்சியராக ஹெச்.கிருஷ்ணன் உன்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர்
திருவாரூர் ஆட்சியராக பி.காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கவிதா ராமு புதுக்கோட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமனம் செய்வதில் முக்கியமான ஒரு சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இருக்கின்றன. இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆட்சியர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஸ்டிரிக்ட் அதிகாரிகள் என்று பெயர் எடுத்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொறுப்பு
தற்போது ஆட்சியர்களாக பொறுப்பேற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளில், தமிழ்நாட்டில் 30 பேர் வரை 40 வயதுக்கும் குறைவானவர்கள். அதாவது கிட்டத்தட்ட 90% ஆட்சியர்கள் இளைஞர்கள். இதில் கிட்டத்தட்ட 70 ஆட்சியர்கள் நேரடியாக ஐஏஎஸ் ஆனவர்கள். அதாவது நேரடியாக யுபிஎஸ்சி தேர்வில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்கள். 20% பேர் TNPSC குரூப்-1 -ல் தேர்ச்சி பெற்று, பிறகுஅனுபவம் பெற்று, ஐஏஎஸ் ஆனவர்கள்.

சிறப்பு
இந்த நியமனம்தான் கவனம் பெற்றுள்ளது. முன்பு பெரிய பொறுப்புகள் கிடைக்காத, இளம் மற்றும் துடிப்பான அதிகாரிகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியராக தேர்வு செய்துள்ளார். சென்னை தொடங்கி திருவாரூர் வரை பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் முந்தைய ஆட்சியில் ஸ்டிரிக்ட் அதிகாரிகள் என்று பெயர் பெற்றவர்கள். முந்தைய ஆட்சியில் பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் ஓரம்கட்டப்பட்டு இருந்தனர்.

இளம் அதிகாரிகள்
இளம் அதிகாரிகளை தேடிப்பிடித்து ஆட்சியர்களாக நியமனம் செய்துள்ளனர். கொரோனாவிற்கு பின் துடிப்பாக வேலை செய்ய கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள் தேவை, கறைபடியாத அதிகாரிகள் தேவை என்று பல்வேறு காரணங்களுக்காக இளம் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஆட்சியர்கள் வரிசையாக மாற்றப்பட்டதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications