இழந்ததும் ஏமாந்ததும்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றங்களின் பரபர பின்னணி!
சென்னை: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அதிரடி மாற்றங்களின் சுவாரசிய பின்னணிதான் இப்போது கோட்டை வட்டாரங்களில் அதிகாரிகளின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் சமீபத்தில் இடமாற்றம் செய்தது திமுக அரசு. அதில் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சின் மாற்றம் தான். நிதித்துறையிலிருந்து கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸை தூக்கி, தொழில் துறையின் முதன்மைச் செயலாளராக நியமித்திருக்கிறார்கள். தொழில்துறையின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறைக்கு மாற்றப்பட்டார்.
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் கிருஷ்ணனுக்கும் எல்லா வகையிலும் முரண்பாடுகள் அதிகரித்தபடியே இருந்து வந்துள்ளது. நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்துக்கு மாறாக கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். கருத்து சொல்வது, நிதித்துறையில் தேங்கி கிடக்கும் கோப்புகளை க்ளியர் செய்ய அமைச்சரை வலியுறுத்துவது என இருவருக்குமான மோதல்கள் வெடித்தபடி இருந்தன. பல துறைகளையும் சேர்ந்த பல கோப்புகள் நிதித்துறை அமைச்சரிடம் குவிந்து கிடக்கின்றன.

வருத்தப்பட்ட அதிகாரி
சம்மந்தப்பட்ட துறையின் செயலாளர்கள், கிருஷ்ணை தொடர்பு கொண்டு, ''நாங்கள் ஃபைல் அனுப்பி 15 நாட்கள் ஆகுது. இன்னும் அந்த ஃபைல் க்ளியர் ஆகி எங்களுக்கு வரவில்லை. இதனால், பல செயல்முறைகளுக்கான அரசாணைகள் பிறப்பிக்க முடியாமல் இருக்கிறது '' என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள். அதற்கு கிருஷ்ணனோ, ''கோப்புகள் பெண்டிங்கில் இருப்பதை பல முறை அமைச்சரிடம் சொல்லிவிட்டேன். அவர் அதில் கவனம் செலுத்தவில்லை '' என்று பதிலுக்கு வருத்தப்பட்டிருக்கிறார்.

முரண்பாடான பதில்
இதற்கிடையே மற்ற துறைகளின் செயலாளர்கள் வருத்தப்படுவதை அமைச்சரிடம் சொல்லியும் அவர் ஏற்கவில்லையாம். இந்த நிலையில் சில நாட்களுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் அம்மா உணவகத்தின் நிதி நிலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு லாவகமாக பதிலளித்து இருந்தார். அதாவது மாநகராட்சி நிர்வாகம்தான் அம்மா உணவகத்தை நடத்துகிறது; அதனால் அதனது நிதி நிலவரம் குறித்து தெரியாது என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அப்போது அருகே இருந்த கிருஷ்ணன், அமைச்சரின் கருத்துக்கு முரண்பாடாக கூறியுள்ளார்.

தூக்கியடிக்கப்பட்ட நிதித்துறை செயலாளர்
இப்படியே முரண்பாடுகள் உச்சகட்டத்துக்குப் போனதால் வேறுவழியே இல்லை- நிதித்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து கிருஷ்ணனை மாற்றுங்கள் என அமைச்சர் தியாகராஜன் வலியுறுத்தியதால் கடைசியாக கிருஷ்ணன் மாற்றப்பட்டுவிட்டார் என்கின்றனர் கோட்டை அதிகாரிகள். இந்த நிலையில் புதிய நிதித்துறை செயலாளர் முருகானந்தம் குறித்தும் சில தகவல்கள் கோட்டை வட்டாரங்கள் உலாவுகின்றன.

உள்துறை மீது கண்
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக இயங்கி வருபவருமான கனடா ரிட்டர்ன் அசோக்வர்தன் ஷெட்டியின் சிஷ்யர்தான் முருகானந்தம் என கூறப்படுகிறது. உள்துறையின் முதன்மைச் செயலாளராக மாற வேண்டும் என்பது முருகானந்தத்தின் பெருவிருப்பமாம். ஆனால், உள்துறை செயலாளரான பிரபாகரை முருகானந்தத்தால் அசைக்க முடியவில்லை.

முதல் முறை நியமனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமல்ல கிச்சன் கேபினெட்டின் ஆதரவையும் பெற்றவர் பிரபாகர் ஐ.ஏ.எஸ். அதனால், ஸ்டாலினின் ஆலோசகராக ஷெட்டி இருந்தாலும், பிரபாகரின் செல்வாக்கினை ஷெட்டியால் ஒன்னும் செய்யமுடியவில்லை. அதனாலேயே தனது சிஷ்யர் முருகானந்தத்துக்கு உள்துறையை அவரால் வாங்கித் தரமுடியவில்லை என்கிறார்கள். இதற்கிடையே, கடந்த 20 ஆண்டுகாலத்தை கணக்கிட்டால், நிதி தொடர்பாக அனுபவம் பெற்றவர்களே இதுவரை நிதித்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், முதன்முறையாக, நிதித்துறையில் அனுபவம் இல்லாத முருகானந்தம், நிதித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications