உதயநிதி முழுமையாக புறக்கணிப்பு? என்ன திடீர்னு இப்படி மாறிடுச்சு?- பின்னணியில் ஸ்டாலின் போட்ட ஆர்டர்!
சென்னை : கடந்த சில நாட்களாக திமுக பிரமுகர்கள் அளிக்கும் நாளிதழ் விளம்பரங்களில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் இடம்பெறாமல் இருப்பது உடன்பிறப்புகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவுப்படி, உதயநிதி ஸ்டாலினை வெகுவாக முன்னிலைப்படுத்துவது தவிர்க்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உதயநிதியிடமே ஸ்டாலின் இதுபற்றி பேசியதாகவும், அதன் காரணமாகவே உதயநிதி எம்.டியாக இருக்கும் முரசொலியில் அவரது படம் இடம்பெறுவது திடீரென குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆர்டர்
உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்ற உளவுத்துறையின் ரிப்போர்ட்டை அடுத்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம், உதயநிதியை ஓவராக முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டாம் என்றும் இனி உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தவிர்த்து மற்ற விளம்பரங்களிலும் உதயநிதி படங்களை தவிர்த்து விடுங்கள் என்றும் நேரம் கூடி வரட்டும், அதுவரை பொறுமையாக இருங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினிடமும் இதுகுறித்து ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படுகிறது.

முரசொலி விளம்பரங்கள்
இதனால், சமீபகாலமாக கட்சியினரின் போஸ்டர்களிலும், நாளிதழ் விளம்பரங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்.டியாக இருக்கும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், தொடர்ந்து உதயநிதியின் புகைப்படத்தை பெரிதாக போட்டு விளம்பரம் கொடுத்துக் கொண்டிருந்த திமுகவினரின் விளம்பரங்கள் சடாரென குறைந்துள்ளன. சமீபத்தில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவுக்காகச் சென்ற முதல்வர் ஸ்டாலினை வரவேற்று அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் கொடுத்த விளம்பரங்களில் உதயநிதி ஸ்டாலினின் படம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதனால் திமுக உடன்பிறப்புகளே அதிர்ச்சியடைந்தனர்.

விளம்பரங்களில் உதயநிதி மிஸ்ஸிங்
விசாரித்ததில், உதயநிதியே முரசொலி நிர்வாகத்தில் தனது புகைப்படங்களை தவிர்க்குமாறு ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டது தெரியவந்துள்ளது.
அதேபோல, நேற்று கரூர், இன்று நாமக்கல் என சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் திமுகவினரின் நாளிதழ் விளம்பரங்களில் உதயநிதி ஸ்டாலினின் படங்கள் இடம்பெறவில்லை. முரசொலி விளம்பரங்களில் பக்கத்திற்குப் பக்கம் இடம்பெறும் உதயநிதியின் புகைப்படங்கள் முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளன. உதயநிதி புகழ்பாடி வந்த திமுகவினர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் உத்தரவால் தற்போது பம்மி அடக்கி வாசித்து வருகின்றனர்.

இன்றைய நாளிதழில்
இன்றைய முரசொலி நாளேட்டில் 25 பக்கங்களில் ஒரே இரு பக்கத்தில் உள்ள அரைப்பக்க விளம்பரத்தில் தான் உதயநிதி ஸ்டாலினின் படம் இடம்பெற்றுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்று வரும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றும் கூட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்களின் விளம்பரத்தில் அவரது புகைப்படங்கலே இடம்பெறவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஓராண்டை எட்டியபோது உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குங்கள் என்ற குரல் திமுகவுக்குள் அதிகம் கேட்கத் தொடங்கின. கடந்த ஆண்டின் இறுதியிலேயே இது தொடர்பான பேச்சுகள் எழுந்தன. உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிதான் பொதுவெளியில் இது தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பல்வேறு அமைச்சர்களும் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி தமிழ்நாடு முழுவதும் அவரது சேவை கிடைக்கச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மே மாதமே
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் எந்த துறை வழங்கப்படும், எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் சுழன்றடித்தன. ஓராண்டு நிறைவின்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படங்களின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் அமைச்சராக பதவியேற்கச் சொல்லலாம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வந்ததாகச் சொல்லப்பட்டது.

உதயநிதி அறிக்கை
இதற்கிடையே கடந்த மாதம் திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட திமுக கழகங்கள் சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 'எனக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிட வேண்டுமென்று இனி யாரும் தீர்மானம் போட்டு தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார் திமுக இளைஞர் அணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்.

ரகசிய ரிப்போர்ட்
இதற்கிடையே உதயநிதியை அமைச்சராக்குவது தொடர்பாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய நினைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உளவுத்துறையிடம் ஒரு சீக்ரெட் சர்வே எடுக்குமாறு ள்ளார். அதன் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் கிடைத்துள்ளன. உதயநிதி ஸ்டாலினை இப்போது அமைச்சராக்கினால் முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்று மக்கள் நினைப்பார்கள் என அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளதாம்.

நல்ல செய்தி இல்லை
திமுக மீது வழக்கமாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாரிசு அரசியல் விமர்சனத்தை பாஜக உள்ளொட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கிவிடுவார்கள். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட இல்லாத நிலையில் அதற்கு வழியமைத்து கொடுத்துவிடக்கூடாது. இலங்கை, மகாராஷ்டிராவில் நடந்து வரும் சம்பவங்களும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கலாம் என்ற முடிவுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

திட்டவட்டம்
எனினும், ஸ்டாலினிடம் அவரது குடும்பத்தினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவைக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நிறைய விவாதங்கள் பொதுவெளியில் நடைபெற்று முடிந்துவிட்டன, அனைத்து தரப்புமே உதயநிதி பதவியேற்பு எப்போது என எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் இனி எதிர்ப்பு இருக்காது என குடும்பத்தினர் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்டாலின் தனக்கு வந்த ரிப்போர்ட்டின் படி, இப்போதைக்கு வேண்டாம் என குடும்பத்தினரிடமும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம். அந்த அடிப்படையிலேயே இப்போது விளம்பரங்களிலும் உதயநிதி தவிர்க்கப்பட்டு வருகிறார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications