எடப்பாடி மீது ஏக கடுப்பில் எம்ஜிஆர், ஜெ., விசுவாசிகள்.. அதிமுகவை அடிக்காத விஜய்! இதுதான் காரணமா? பலே
சென்னை: புது வரவாக இருந்தாலும் தமிழக அரசியலை பரபரப்பாய் வைத்திருக்கிறார் விஜய். திமுக, அதிமுக தொடங்கி நாம் தமிழர் வரை அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் விஜய் பற்றி பேசி வருகின்றன. பாஜக திமுகவை வெளிப்படையாக விமர்சிக்கும் விஜய் அதிமுகவை மறைமுகமாக கூட விமர்சிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு பின்னால் விஜயின் அரசியல் சாதூரியம் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கட்சியை ஆரம்பித்த நிலையில் தற்போது தீவிர கள அரசியலுக்கு திரும்பி இருக்கிறார்.
இதுவரை ஓரிரு அரசியல் நிகழ்வுகள் தவிர, மற்ற விவகாரங்களில் அறிக்கை அரசியல் மட்டுமே செய்து வருகிறார் விஜய். இந்த நிலையில் திருப்புவனத்தில் போலீஸாரால் கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் இல்லத்திற்கு விஜய் நேரில் சென்றது அரசியல் களத்தை சூடாக்கியது.

ஆளுங்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் தொலைபேசியிலும், வீடியோ காலிலும் பேசிய நிலையில் விஜய் நேரடியாகவே சென்றது மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆனது. ஆளும் கட்சியான திமுக தமிழக வெற்றி கழகத்தை உக்கிரமாக விமர்சித்து வருகிறது. பாஜக அதிமுகவோ அமைதி காக்கிறது. ஆனால் இதுவரை அனைத்து நிகழ்வுகளிலும் விஜய் திமுகவையும் பாஜகவையும் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். ஆனால் அதிமுக குறித்த விமர்சனங்களை விஜய் அறவே தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஊழல் நிறைந்த கட்சி என திமுகவையும், பிளவுவாத அரசியல் செய்யும் கட்சி என பாஜகவையும் விஜய் விமர்சித்து வருகிறார். ஆனால் அதிமுக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கே ஆளாகவில்லையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏன் விஜய் அதிமுகவை விமர்சிக்க மறுக்கிறார் அல்லது தவிர்க்கிறார் என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து விசாரித்த போது தான் அதிமுக ஓட்டுகளை குறி வைப்பதால் தான் விஜய் விமர்சனங்களை தவிர்த்து வருகிறார் என்கின்றனர்.
அதிமுகவை பொறுத்தவரை தலைமை மீது உண்மையான தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். குறிப்பாக எம்ஜிஆர் விசுவாசிகள், ஜெயலலிதா விசுவாசிகள் தற்போதைய கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் அவர்களது வாக்கை கவரும் வகையில் விஜய் காய் நகர்த்தி வருகிறார். அதிமுகவை விமர்சித்தால் அது ஜெயலலிதாவையும் விமர்சித்தது போல தான். எம்ஜிஆரையும் விமர்சித்தது போல தான் அமையும். இதனால் தான் அந்த கட்சியின் மீதான விமர்சனங்களை அறவே தவிர்த்து வருகிறார்.
இதே திட்டத்தை தான் பாஜகவும் கையில் எடுத்திருந்தது. அதாவது ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக, அதிமுக தலைவர்களை தலையில் வைத்து கொண்டாடியது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அமித்ஷா வரை தேசிய தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் புகழ் பாடினர். எம்ஜிஆரையும் புகழ்ந்து தள்ளினர். அதனால்தான் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் அதிமுகவையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு எம்ஜிஆர் ஜெயலலிதா விசுவாசிகளின் வாக்குகள் பாஜகவுக்கு சென்றது. தேனி, ராமநாதபுரத்திலும் இதே நிலைதான்.
அதனால்தான் ஜெயலலிதாவின் விசுவாசிகளாக அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை பக்கத்தில் வைத்து பாஜக அழகு பார்த்தது. தற்போது அதே ஸ்டைலை விஜய்யும் கடைபிடிக்கிறார். எம்ஜிஆர் ஜெயலலிதாவை விமர்சிப்பதை தவிர்த்தாலே போதும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் விசுவாசிகள் தாங்களாகவே தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் திரும்பி விடுவார்கள் என்பது தான் விஜயின் திட்டம். அதை நோக்கியே அவரது அரசியல் செயல்பாடுகளும் இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் இது கை கொடுக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications