வாட்டர் பாட்டிலால் வந்த புகைச்சல்.. ஸ்டிரிக்டாக சொன்ன செந்தில் பாலாஜி- அதிருப்தியில் முக்கிய தலைகள்?
சென்னை: பார் டெண்டரில் எந்த விதமான அரசியல் சார்பும் கடைபிடிக்கப்படுவது இல்லை, எல்லா டெண்டர் விதிமுறைகளும் நேர்மையாக கடைபிடிக்கப்படுகிறது என்று மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கண்டிப்புடன் தெரிவித்தார். பார் உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து செந்தில் பாலாஜி இப்படி குறிப்பிட்டார்.
நேற்று சென்னையில் மின்சாரத் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு பார் உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது. டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு நடந்துவிட்டதாக கூறி செந்தில் பாலாஜிக்கு எதிராக போராட்டம் செய்தனர்.
தங்களுக்கு பார் உரிமம் வழங்காமல் திமுகவினருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் பார் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும்.இதில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து பார் உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது.

பேட்டி
இந்த போராட்டத்திற்கு பின் பார் உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். ஏன் இந்த போராட்டம் நடத்துகிறீர்கள்.. என்னிடம் ஏற்கனவே வந்து சொல்லி இருக்கலாமே.. இப்போது இப்படி போராடுவதில் என்ன நியாயம்.. இதற்கு முன்பே மனு கொடுத்து இருந்திருந்தால் அதில் நடவடிக்கை எடுத்து இருப்பேனே என்று அவர்களிடம் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி டெண்டர் வழங்க வந்த யாரையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. எந்த அரசியல் கட்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

செய்தியாளர் சந்திப்பு
யாரெல்லாம் முறையாக படிவங்களை அனுப்பி உள்ளார்களோ அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆன்லைனிலும், நேரிலும் முறையாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 11715 டாஸ்மாக் பார் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன. கடந்த வருடம் 6482 டாஸ்மாக் பார் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்தது என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம்,. தமிழ்நாட்டில் பார் நடத்த வசதி உள்ள 1550 டாஸ்மாக்கிற்கு டெண்டர் விடப்பட்டது. கொரோனா காலம் என்பதால் கூடுதலாக 2 விதிகள் அமல்படுத்தப்பட்டது.

ஊழல் இல்லை
டெண்டர் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்று யாராவது கூறினார்களா?. எங்காவது யாரவது புகார் அளித்தனரா? டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவு இன்றி நடக்கிறது என்று செந்தில் பாலாஜி நேற்று குறிப்பிட்டார். அதிமுகவினர் சிலர்தான் தங்களுக்கு டெண்டர் கிடைக்காமல் போய் விடுமோ என்று இப்படி அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஆட்சி மாற்றத்தால் தங்களுக்கு டெண்டர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அதிருப்தியில் இப்படி போராடி உள்ளனராம்.

புதுப்பிப்பு
பார் டெண்டரில் எந்த விதமான அரசியல் சார்பும் கடைபிடிக்கப்படுவது இல்லை. எல்லா டெண்டர் விதிமுறைகளும் நேர்மையாக கடைபிடிக்கப்படுகிறது என்று செந்தில் பாலாஜி இதனால் நேற்று உறுதியாக சொன்னார். இந்த நிலையில் பார்களில் வழங்கப்படும் வாட்டர் பாட்டில் டெண்டரையும் முன்பு இருந்த ஒப்பந்தரர்களுக்கே வழங்க செந்தில் பாலாஜி முடிவு எடுத்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிகின்றன. அவர்கள்தான் வாட்டர் பாட்டில் ஒப்பந்தத்தை வைத்து இருந்தது. அவர்களே அதை தொடரட்டும்.

புது ஒப்பந்தம் வேண்டாம்
ஒப்பந்தத்தை புதிய நபர்கள் யாருக்கும் கொடுக்க வேண்டாம். புதிதாக வேறு நபர்கள் வாட்டர் பாட்டில் டெண்டர் எடுத்தால் அதனால் குழப்பம் ஏற்படும். இதில் கட்சி எல்லாம் பார்க்க வேண்டாம். இதுவரை கொடுத்தவர்களே கொடுக்கட்டும். ஆனால் வாட்டர் பாட்டில் ஒன்றை 2-3 ரூபாய்க்குதான் கொள்முதல் செய்வோம் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் அரசு தரப்புக்கு நிறைய லாபம் கிடைக்கும்.

ஒப்புதல்
அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். இந்த புதிய விலைக்கு வாட்டர் சப்ளை ஒப்பந்ததாரர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. புதிய விலை நிர்ணயம் கொஞ்சம் கையை கடிக்கும். இருந்தாலும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டால் ஓகேதான். ஒப்பந்தத்தை நீக்காமல் இருக்கும்வரை சரி என்று வாட்டர் சப்ளை ஒப்பந்ததாரர்கள் கூறி உள்ளனர். இதனால் இந்த வாட்டர் சப்ளை ஒப்பந்தம் புதிய நபர்களுக்கு கைமாறும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது

திமுக அதிருப்தி
இதன் காரணமாக தங்களுக்கு வாட்டர் சப்ளை ஒப்பந்தம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சில திமுகவினர் கொஞ்சம் புகைச்சலில் இருக்கிறார்களாம். வாட்டர் சப்ளை மிகப்பெரிய ஒப்பந்தம். அது எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது அதுவும் பழைய ஒப்பந்தரர்களுக்கே சென்றுவிடும் போல தெரிகிறது. அமைச்சர் இப்படி கட்சி சார்பின்றி வெளிப்படையாக இருப்பது ஓகேதான்.. ஆனால் எங்களுக்கும் கொஞ்சம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று திமுகவில் சிலர் சொல்லி வருவதாக அறிவாலய வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.












Click it and Unblock the Notifications