விரக்தியோட பேசுனாரே ஓபிஎஸ்.. மீண்டும் தேனிப் பக்கம் வீசப்போகும் டெல்லி காற்று? ஆதரவாளர்கள் உற்சாகம்!
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக உடனான கூட்டணியை முறித்துள்ளதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர். டெல்லி காற்று தேனி பக்கம் வீசுமா என்பது போகப்போகத் தெரியும்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியும் தேர்தல் வியூகங்களை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. பாஜக கூட்டணியில் பெரிய கட்சிகளில் ஒன்றாக இருக்கும் அதிமுகவுடன் இணைந்து பாஜக 2024 லோக்சபா தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டு வந்தது.

அதன்படியே எடப்பாடி பழனிசாமிக்கு முழு அங்கீகாரமும் ஆதரவும் பாஜக கொடுத்து வந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் பல முயற்சிகளை மேற்கொண்டபோதும், பாஜக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நின்றதன் காரணமாகவே அவர்களது வியூகங்கள் தவிடுபொடியாகின. பாஜக மேலிடத்தின் ஆதரவுடன் தான் ஓபிஎஸ்ஸையும் டம்மி ஆக்கினார் எடப்பாடி பழனிசாமி.
ஓ.பன்னீர்செல்வம் டெல்லியை அணுக எவ்வளவோ முயற்சித்த போதும் எட்ட முடியாத நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லிக்குச் சென்று மேலிட தலைவர்களைச் சந்தித்து தேர்தல் பற்றியும், சீட் பங்கீடு பற்றியும் பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக கேட்டதாக தகவல்கள் வெளியாகின.
பாதிக்கு பாதி தொகுதிகளை பாஜகவுக்கு விட்டுத் தருவதும், அதோடு கூட்டணி கட்சிகளுக்கு பாஜகவையே பகிர்ந்து கொடுக்கச் செய்வதும் சரியாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி யோசித்ததாக கூறப்பட்டது. மொத்த தொகுதியில் 30 சதவீதத்திற்கு மேல் பாஜகவுக்கு கொடுக்க அதிமுக தயாரில்லை என்றும் சொல்லப்பட்டது. இது அதிமுக உயர் மட்டத் தலைவர்களிடையே விவாதமாக இருந்து வந்தது.
இதற்கிடையே தான் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பற்றி பேசி அதிமுகவைச் சீண்டினார். அதற்கு அதிமுக மாஜி அமைச்சர்கள் பதிலடி கொடுக்க, பதிலுக்கு இறங்கி அடித்தார் அண்ணாமலை. இதுவும் அதிமுக தலைவர்களை கொதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியபோது அதிமுகவினர் கொந்தளித்தாலும் கூட, எடப்பாடி, பாஜகவை கைவிட தயாராக இல்லை.
ஆனால், இப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நம்மால் ஒரு இடம் கூட ஜெயிக்க முடியாது, இவ்வளவு ஆன பிறகு தொண்டர்கள் பாஜக கூட்டணிக்காக வேலை செய்ய மாட்டார்கள் என இரண்டாம் கட்டத் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பொறுமித் தள்ளியுள்ளனர். மேலும் டெல்லியில் நடந்த சீட் பங்கீடும் எடப்பாடிக்கு திருப்தி தரவில்லை.
இதையடுத்தே, பாஜக கூட்டணி வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி உறுதியான முடிவை எட்டியதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டதாக ஜெயக்குமார் அறிவித்ததையே அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் என்றால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஒருவகையில் உற்சாகம் அடைந்திருக்கிறதாம்.
எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக முழு ஆதரவு கொடுத்து வந்ததால் தான் ஓபிஎஸ் நிலைமை பரிதாபகரத்திற்குச் சென்றது. ஆனால், இப்போது, எடப்பாடி தரப்பு, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளதால், டெல்லி காற்று தேனி பக்கம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் கொடுத்திருக்கிறது.
ஓரிரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இதுவரை இல்லை, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என விரக்தியுடன் பேசியிருந்தார்.
ஆனால், இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக - பாஜக இடையே கூட்டணி உறவு முறிந்துள்ளதால், ஓபிஎஸ்ஸுக்கு இன்னொரு சான்ஸ் இருக்கிறது, தென் மாவட்டங்களில் தேர்தல் வெற்றிக்காக, ஓபிஎஸ் தயவை பாஜக நாடும், அதன் மூலம் பல திருப்பங்கள் ஏற்படலாம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பழ ஊழல் வழக்குகள் இருக்கின்றன, அதன் மூலம் ஓபிஎஸ்ஸுக்கு வாய்ப்புகள் தரப்படலாம் என்ற பேச்சுகள் ஓபிஎஸ் தரப்பில் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications