"இதை' மட்டும் செஞ்சுட்டா.. "பெண்களின் வாக்கு".. அப்படியே எடப்பாடியாருக்குத்தான்.. அறிவிப்பாரா!
முதல்வர், மகளிர் சுயஉதவி குழுக்களின் கடனை தள்ளுபடி செய்ய முயற்சி நடக்கிறது
சென்னை: பெண்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் பெறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த சிறப்பு வாய்ந்த அறிவிப்பையும் விரைவில் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லட்சோபலட்ச பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியதும், ஒளியேற்றி கொண்டிருப்பதும் மகளிர் சுய உதவி குழுக்கள்தான்.. கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி போன்றவைகளில் மகளிர் சுய உதவி குழுவினர் தங்கள் கணக்குகளை தொடங்கி கடன் பெற்று சிறுதொழில்களையும் நடத்தி வருகின்றனர்.
இதன்மூலம், ஊறுகாய் தயாரிப்பது, கேன்டீன் நடத்துவது உட்பட, தையல் கடை வைத்து நடத்துவது வரை அவரவர் திறமைக்கேற்ப மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் தொழில் புரிந்து வருகின்றனர்.. இதனால் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக உதவியாக இருப்பது மட்டுமின்றி, தங்களுக்கே சொந்த காலில் நிற்கும் தைரியத்தையும், உத்வேகத்தையும் இந்த சுயஉதவி குழுக்கள் தந்து வருகின்றன.

தற்கொலை
ஆனால், கொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே வருவாய் இழந்து தவிக்கும் சூழல் இவர்களுக்கு ஏற்பட்டது.. இதனால் பல குடும்பங்களில் பிரச்சனை வெடித்தன.. வருவாய் இல்லாமல் தவித்த நிலையில், சில தனியார் வங்கிகள் கடன் கேட்டு பெண்களை நெருக்கடி தந்த சம்பவமும் நடந்தது.. அதன்மூலம் சில பரிதாப தற்கொலைகளும் நிகழ்ந்தன. எனவே சுய குழுவினர் பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல வகைகளில் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், அது சம்பந்தமான நடவடிக்கையை அரசு இதுவரை எடுக்கவில்லை.

கனிமொழி
இந்த விஷயத்தான் திமுக கையில் எடுத்தது.. குறிப்பாக எம்பி கனிமொழியும் இதை பற்றி நிறையவே பேசினார்.. மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடனை தள்ளுபடி செய்யுமாறு மத்திய நிதி அமைச்சருக்கு கடிதமும் எழுதினார்.. சேலத்தில் ஒருமுறை மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் நேரடியாக அவர்களுடன் கலந்துரையாடினார்.. மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுக அரசு நாசப்படுத்தி வைத்துள்ளதாகவும் பகிரங்கமாக குற்றமும் சாட்டினார்.

சுயஉதவி
இதே கோரிக்கையை, திமுக தலைவரின் பிரச்சாரங்களிலும் பெண்கள் எழுப்பி வருகின்றனர்.. மனுக்களையும் தந்து வருகின்றனர்.. அதனால்தான் ஸ்டாலின், இன்று பேசும்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சுயஉதவி குழுக்களின் கடனை ரத்து செய்வோம் என்று நம்பிக்கை தந்துள்ளார்.. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசை ஒப்பிட்டு சோஷியல் மீடியாவில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன..வழக்கமாக ஸ்டாலின் ஏதாவது அறிவிப்பினை மக்களிடம் தெரிவித்தால், அதை உடனடியாக அதிமுக அரசு நிறைவேற்றி பெயரையும் அசால்ட்டாக தட்டி கொண்டு போய்விடுகிறது..

கடன் தள்ளுபடி
எனவே, இந்த அறிவிப்பிலும் முதல்வர் ஏதாவது அறிவிப்பினை உடனடியாக வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் இன்னொரு விஷயமும் உள்ளது.. விவசாயிகளின் ஓட்டுக்களை பெறுவதற்கு, கூட்டுறவு வங்கிகளில் 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.. அதேபோல், பெண்களின் ஓட்டுக்களை கவர, கூட்டுறவு வங்கிகளில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய கடனை, தள்ளுபடி செய்வது தொடர்பாக, அரசும் சில காலமாகவே பரிசீலித்து வருகிறது.

அறிவிப்பு
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், கூட்டுறவு வங்கிகளில், மகளிர் குழுக்களுக்கு, எவ்வளவு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை, கூட்டுறவு துறை பெற்று வருகிறது. அதனால், எடப்பாடியார் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள்..

கடன் ரத்து
அதுமட்டுமல்ல, சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டி உள்ளது.. கூட்டுறவு வங்கிகளில் வழங்கிய கடன் தொடர்பாக, எம்எல்ஏக்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்க வேண்டி உள்ளது.. கடன் விபரங்களை புதுப்பிக்கவும் தகவல் பெறப்பட்டு வருகிறது.. இதெல்லாம் வழக்கமான நிகழ்வு என்றாலும், கடன்களை ரத்து செய்வது தொடர்பாக, அரசும் ஒருபக்கம் முயற்சிகளை எடுத்து கொண்டுதான் இருக்கிறது.

முதல்வர்
ஒருவேளை இதெல்லாம் முன்கூட்டியே அறிந்ததால்தான், ஸ்டாலின் இப்படி இன்றைக்கு அறிவித்துள்ளாரா தெரியவில்லை.. ஆனால், இந்த அறிவிப்பினை மட்டும் முதல்வர் வெளியிட்டால், நிச்சயம் மகளிர் வாக்குகளை ஒரே அறிவிப்பில் தட்டி கொண்டு போய்விடுவது என்பது நிச்சயமான உண்மை.. ஒருவருடம் வருமானமின்றி தவித்த பெண்களுக்கு இதைவிட மகிழ்ச்சியான அறிவிப்பு எதுவும் இருக்க முடியாது. இதேபோல, மாணவர்களின் கல்வி கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்ற திமுகவின் அறிவிப்பையும் அதிமுக பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன... தினம் தோறும் புது அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை திணறடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி..!












Click it and Unblock the Notifications