3750 + 50 + 50.. ஆசை ஆசையாக வீட்டுக்கு போன கே.எஸ் அழகிரி.. ஸ்டாலின் தந்த "நெகட்டிவ்" பதில்? அடடே!
சென்னை: காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க மேற்கொள்ள இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரைக்காக தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சியை பல மாநிலங்களில் மீட்டு எடுக்கும் என்று அதன் மூத்த தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக நம்பி வருகிறார்.
காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கான பிரச்சனை நிலவி வரும் நிலையில் அக்கட்சி பாரத் ஜோடா யாத்திரை என்ற மிகப்பெரிய யாத்திரையை நாடு முழுக்க நடத்த உள்ளது. ராகுல் காந்தி செப்டம்பர் 7 - ந்தேதி குமரியில் இந்த பயணத்தை துவக்குகிறார்.
இந்த நடைப்பயணத்தில் ஒவ்வொரு 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராகுல் காந்தியுடன் 50 ஆயிரம் பேர் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரம்மாண்டமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கு கன்னியாகுமரியில்தான் ராகுல் காந்தி தொடக்க புள்ளி வைக்க உள்ளார். சென்னைக்கு வரும் ராகுல் காந்தி செப்டம்பர் 7ம் தேதி ஸ்ரீ பெரும்பதூரில் தனது தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மரியாதையை செய்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமை ஏற்கணும்! பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம் என கி.வீரமணி வேண்டுகோள்!
யாத்திரை
பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி என்று பேரணி தொடங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி கவனித்து வருகிறது. 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. தினமும் 20- 30 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி இதற்காக நடைபயணம் செல்ல உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து கேரளா.. அங்கிருந்து கர்நாடகா, ஆந்திர பிரதேசம் தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை அடக்கி கடைசியில் ஜம்மு காஷ்மீரில் பயணத்தை முடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஸ்டாலின்
இந்த நிலையில், நேற்று முன் தினம் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. அவருடன் காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் பலரும் சென்றிருந்தனர். அப்போது, ''ராகுல் பயணத்தின் தொடக்க விழாவில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் ; நீங்கள் கலந்து கொண்டால் ராகுலுக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கும் '' என்று ஸ்டாலினை அழைத்திருக்கிறார் அழகிரி. அதற்கு, முயற்சிக்கிறேன் என்று மட்டும் சொல்லியுள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலின் வருவாரா?
ஸ்டாலின் இந்த நிகழ்விற்கு வருவது உறுதியாகிவிட்டது என்றே கூறுகிறார்கள். இதனால்தான் ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என்று கே. எஸ் அழகிரியும் வெளிப்படையாக அறிவித்தார். ராகுல் பயணத்தின் தொடக்கவிழாவை மிக பிரமாண்டமாக அசத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ள தமிழக காங்கிரஸ், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது 50 பேருந்துகளில் கதர்சட்டைக்காரர்களை திரட்டி வர வேண்டும் என முடிவு செய்து அதனை மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறது.
பிரம்மாண்ட பிளான்
மொத்த யாத்திரை தூரம் 3750 கிலோ மீட்டர்.. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 50 பஸ்.. 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு 50 ஆயிரம் நிர்வாகிகள் என்ற திட்டத்தை காங்கிரஸ் போட்டுள்ளது. மாவட்ட தலைவர்களோ, ''50 பேருந்துகளுக்கு எங்கே போவது ? அப்படியே ஏற்பாடு செய்தாலும் பல லட்சங்கள் செலவாகும். அவ்வளவு செலவு செய்ய பணம் இல்லையே ! '' என்று புலம்பித் தள்ளி வருகிறார்களாம். கையில் காசு இல்லை, மேலிடம் கொடுத்தால் ஏற்பாடு செய்கிறோம். இல்லையென்றால் நாங்கள் என்ன செய்வது என்று சொல்லி வருகிறார்களாம்.
பேருந்து கிடைக்குமா?
அதோடு, '' வேண்டுமானால் முதல்வரிடம் (ஸ்டாலின்) சொல்லி, அரசு பேருந்துகளை இலவசமாகப் பெற்றுத் தாருங்கள். மேலதிக செலவுகளை நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்'' என்று சொல்லியுள்ளனர். இந்த யோசனையை கெட்டியாக பிடித்துக் கொண்ட அழகிரி, அரசு பேருந்துகளை இலவசமாக கொடுத்து உதவ வேண்டும் என்று ஸ்டாலினிடம் ஆசை ஆசையாக அந்த சந்திப்பின் போது கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், பாசிட்டிவ்வான பதிலை ஸ்டாலின் சொல்லவில்லையாம். இதுவரை நெகட்டிவ் பதில்கள் வந்ததாகவே கூறப்படுகிறது, இருப்பினும், அரசு பேருந்துகளை இலவசமாக பெற தொடர் முயற்சியில் இருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்.