முதல்முறை இப்படி! எடப்பாடிக்கு போன ஸ்டாலினின் லெட்டர்! அந்த 10 பாயிண்ட்ஸ் என்ன? பதில் வருமா?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று மாநிலம் முழுக்க உள்ள அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தை மட்டும் முதல்வர் ஸ்டாலின் பொதுவில் பகிர்ந்து உள்ளார்.
பொதுவாக தமிழ்நாடு அரசியலில் இப்படி ஆளும் முதல்வர்.. எம்எல்ஏக்கள் எல்லோருக்கும் கடிதம் அனுப்புவது வழக்கமே கிடையாது. தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு கடிதம் அனுப்பும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்த முறை முதல்வர் ஸ்டாலினோ.. அதிமுக எம்எல்ஏக்கள், பாஜகவின் 4 எம்எல்ஏக்கள், கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்கள் என்று எல்லோருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
மெயில் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கடிதம் சென்று சேர்க்கப்பட்டு உள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன்பே உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மாநிலம் முழுக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு, கோரிக்கைகள் பெறப்பட்டன.
அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் உங்கள் தொகுதியில் முதல்வர் என்று மாற்றப்பட்டது. முன்பு வாங்கப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் வேகமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தனி துறை, ஐஏஎஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டனர்.

கோரிக்கை
இந்த கோரிக்கைகள் 90 சதவிகிதத்திற்கும் மேல் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு முழுக்க அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து அதை களைய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாகவே அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், 07.05.2022 அன்று தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட மேலும் ஐந்து புதிய திட்டங்களைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் அறிவித்ததைத் தங்களுக்கு அன்புடன் நினைவூட்ட விரும்புகிறேன்.

கடிதம்
சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது. குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம், மக்களின் இன்றியமையாத தேவையின் அடிப்படையிலான அத்தகைய திட்டங்களுக்கான பணிகளை நிறைவேற்றிடத் திட்ட அறிக்கை தயாரித்து அரசு அளவில் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற வேண்டிய அவசியமும் இருக்கலாம்.

கோரிக்கை என்ன
இதுபோன்ற அத்தியாவசியத் திட்டங்களை அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.
உங்களுடைய தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று சட்டமன்ற உறுப்பினராகிய நீங்கள் கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கலாம். பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு. தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.

எடப்பாடி
இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை மட்டும் முதல்வர் ஸ்டாலின் பொதுவில் வெளியிட்டு இருக்கிறார். இதே கடிதம் பெறுநர் பெயர் மாற்றப்பட்டு மற்ற எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்களது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்களின் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பத்து முக்கியமான கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி வழங்க வேண்டும்.

கோரிக்கை
அந்தப் பரிந்துரைப் பட்டியலைத் தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அடுத்த 15 தினங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, பாஜக எம்எல்ஏக்கள், மற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இந்த கோரிக்கைகளை பட்டியலிட்டு ஆட்சியரிடம் வழங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் ரீதியாக.. மோதல்கள் கடந்து இந்த முன்னெடுப்பு சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இதை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications