ஜஸ்ட் மிஸ்! உள்ளே இறங்கிய திமுக மேலிட தூதுவர்.. தப்பிய மேயர் தலை.. ஆனால் இனிமேல்தான் ட்விஸ்ட்டே!
சென்னை: காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், கவுன்சிலர்கள் யாருமே வராததால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. எனினும், மேயர் விரைவில் மாற்றப்படலாம் என அறிவாலய தகவல்கள் பரபரக்கின்றன.
கடந்த மாதம் கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக சொந்தக் கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீது நேற்று (ஜூலை 29) வாக்கெடுப்பு நடைபெற இருந்தது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. 32 வார்டுகளில் திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். விசிக, காங்கிரஸ் சார்பில் தலா ஒரு கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், வெற்றி பெற்றிருந்தனர்.
மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபரன் இருந்து வருகிறார். மேயர் மகாலட்சுமிக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், திமுக கவுன்சிலர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி: காஞ்சிபுரம் மேயரை மாற்றக் கோரி திமுக மாவட்ட செயலாளர் சுந்தரிடம் கவுன்சிலர்கள் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் அமைச்சரான கே.என்.நேரு முன்னிலையிலும் சமாதான பேச்சு நடைபெற்ற போதும் எந்த உடன்பாடும் எட்டவில்லை. இந்த நிலையில் தான் திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.
மேயர் மகாலட்சுமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி 33 கவுன்சிலர்கள், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் நம்பிக்கை இல்லா தீர்மான மனு அளித்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் நேற்று (ஜூலை 29) நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
திடீர் சுற்றுலா பயணம்: இதற்கிடையே, திமுக மேலிடம் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் வகையில் அன்பகம் கலை தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த சூழலில், திமுக கவுன்சிலர்கள் 22 பேர் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றனர்.
திமுக கவுன்சிலர்கள் சொகுசு பேருந்தில் மாமல்லபுரத்து அனுப்பி வைக்கப்பட்டனர். காலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திற்கு கவுன்சிலர்கள் யாருமே வரவில்லை. மேயரும் வரவில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
வாக்கெடுப்பு நடைபெறவில்லை: மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற வேண்டும் என்றால், 5ல் ஒரு பங்கு, அதாவது 41 கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று, மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இதற்கு குறைவான கவுன்சிலர்கள் பங்கேற்றால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். இந்தச் சூழலில் தான் கவுன்சிலர்கள் யாருமே மாமன்றத்துக்கு வரவில்லை.
மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எந்த மாமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளாததால் நம்பிக்கையில்லாத தீர்மானம் தோல்வி அடைந்ததாக காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்தார்.
விரைவில் ராஜினாமா?: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜின் பதவி தப்பி உள்ளது. ஆனால், விரைவில் காஞ்சிபுரம் மேயர் மாற்றப்படலாம் என்கின்றன அறிவாலய தகவல்கள். இந்த ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் விரைவில் காஞ்சிபுரம் மேயர் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக இதேபோல திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தி கவுன்சிலர்களை அப்போதைக்கு சமாதானம் செய்தார். வாக்கெடுப்பு நடைபெற இருந்த நாளில் கவுன்சிலர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அடுத்த மாற்றம்: எனினும், திமுக கவுன்சிலர்கள் - மேயர் சரவணன் இடையே பூசல் விலகாத நிலையில், கடந்த மாதம் மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சரவணன். அங்கு வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மேயர் தேர்தல் நடக்கிறது.
அதேபோல, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், திமுக தலைமை அறிவுறுத்தலின் பேரில் விரைவில் ராஜினாமா செய்வார், அங்கும் வேறொருவர் மேயராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் கசிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications