நீதிபதியை நான் விமர்சிக்கவில்லை.. மன்னிப்பு கேட்டாலும்.. மனுவாக தாக்கல் செய்ய முடியாது -ஓபிஎஸ் வாதம்
சென்னை: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினாலும், அதை மனுவாக தாக்கல் செய்ய முடியாது என்று ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
உச்ச நீதிமன்ற விசாரணையின் முடிவில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு விசாரிக்கட்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தனி நீதிபதி விசாரிக்கட்டும். சில விஷயங்களை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் உயர் நீதிமன்ற விசாரணையை பாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தது. இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதற்கு முன் இதே நீதிபதிதான் அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார். இதனால் இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பண்டாரியிடம் முறையிட்டது.

பொதுக்குழு
ஏற்கனவே அவர் பொதுக்குழு விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு கண்டனம் தெரிவித்தார். ஏற்கனவே எங்களை கண்டித்த அவர் மீண்டும் வழக்கை விசாரித்தால் சரியாக இருக்காது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை வைத்தது. இதை பற்றி நீதிபதி கிருஷ்ணனிடம் பேசிவிட்டு முடிவு எடுப்பதாக தலைமை நீதிபதி கூறினார். இந்த நிலையில் நேற்று பொதுக்குழு வழக்கு நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கண்டிப்பு
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.அப்போது நீதிபதி ஏன் என கேள்வி எழுப்பியபோது, ஓபிஎஸ் தரப்பில், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதோம், அதில் முடிவு எடுக்க வேண்டி உள்ளதால் திங்கள் வரை இதை விசாரிக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கேட்டு தனி நீதிபதி கிருஷ்ணன் கடுமையாக கோபம் அடைந்தார்.

விமர்சனம்
நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். இது மிக மிக தவறான செயல். இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை பதிவு செய்தார். அதோடு நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இன்று முடிவு?
இந்த பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் தலைமை நீதிபதி பண்டாரி இன்று தனி நீதிபதி தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக நடந்த சேம்பர் விசாரணையில், வழக்கை ஒரு நீதிபதியிடம் இருந்து மற்றொரு நீதிபதிக்கு மாற்றுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று ஓபிஎஸ் தரப்பிடம் தலைமை நீதிபதி பண்டாரி தெரிவித்தார். அதனால் தனி நீதிபதி கிருஷ்ணன் மாற்றப்பட வாய்ப்பு குறைவு என்றே எதிர்பார்க்கப்பட்டது.

திருப்பம்
இந்த நிலையில்தான் இன்று நடந்த விசரணையில், ஓபிஎஸ் தரப்பு நீதிபதி கிருஷ்ணனிடம் மன்னிப்பு. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். திறந்த மனதோடு வழக்கை நடத்துங்கள் என்று ஓபிஎஸ் தரப்பு நீதிபதியிடம் தெரிவித்தது. இதையடுத்து பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற ஓபிஎஸ் அனுப்பிய மனுவை வாபஸ் வாங்க வேண்டும்.. 2 நாட்களுக்கு முன்பு நீங்கள் என்னிடமே சொல்லி இருந்தால் நானே விசாரணையில் இருந்து விலகி இருப்பேன் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஓபிஎஸ் தரப்பிற்கு தெரிவித்தார்.

மனுவாக தாக்கல் செய்ய மறுப்பு
இதை ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே வாதிடுகிறோம் என்று ஒப்புக்கொண்டது. இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஓ பன்னீர்செல்வம் தரப்பை அதிகாரபூர்வமாக மன்னிப்பு கடிதமாக அளிக்க கோரியது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினாலும், அதை மனுவாக தாக்கல் செய்ய முடியாது என்று ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிபதிக்கு எதிராக நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. நீதிபதியை மாற்ற கோரிய மனுவை திரும்ப பெற தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளோம். மற்றப்படி மன்னிப்பு கூறியதை மனுவாக தாக்கல் செய்ய முடியாது .நீதிபதியின் உத்தரவில் உள்ள கருத்துக்கு எதிராக மட்டுமே நாங்கள் மனு தாக்கல் செய்தோம் என்று ஓபிஎஸ் தரப்பு பதில் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications