அப்படி போடு.. அப்பாவும் மகனும் பட்ட பாடெல்லாம் வீண் போகல.. தேடி வருகிறதா அமைச்சர் பதவி.. டெல்லி பரபர
ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்கிறார்கள்
சென்னை: முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன், ஓபி ரவீந்திரநாத்துக்கு விரைவில் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.
கடந்த 2019, மே மாதம் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றதுமே தேனியில் ஒரு பேட்டியை தந்தார் ஓபிஎஸ் மகன் ஓபிஆர்.. அப்போது, "மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவு எனக்கு சுத்தமாக கிடையாது" என்று சொல்லி இருந்தார்..
ஓபிஆர் அப்படி சொல்லிவிட்டாலும், ஆரம்பம் முதலே இவருக்கு அமைச்சர் பதவி மீது ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது.. இவரை விட தன் மகனுக்கு அமைச்சர் பதவியை வாங்கி தருவதில் ஓபிஎஸ் பெரும் முயற்சிகளையும் எடுத்து வந்தார்... இதற்காகவே டெல்லியில் முகாமிட்டும் வந்தார்.

மக்களவை
அதேசமயம், பாஜகவுடன் இணக்கமான போக்கை இவர்கள் இருவருமே கடைப்பிடித்து வருவதை மறுக்க முடியாது.. ஓபிஎஸ் மக்களவையில் பேசுவதை பார்த்தாலே, இவர் பாஜகவா? அதிமுகவா? என்று கேட்கும் அளவுக்கு அந்த கட்சி தலைமைகளிடம் நெருக்கம் காட்டி வருபவர். ஆனாலும், பாஜக அவ்வளவு சீக்கிரம் மந்திரி பதவியை எடுத்து தந்துவிடவில்லை.

ரவீந்திரநாத்
பல மூத்த தலைவர்கள் அதிமுகவில் இருக்கும் போது ஜூனியரான வந்த ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி தந்தால், கட்சியில் பல சர்ச்சைகள் ஏற்படும் என்று முக்கிய நிர்வாகிகள் எடப்பாடியாரிடம் தெரிவித்தும் வந்தனர்.. அதனால்தான் மூத்த தலைவர் வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பொறுப்பு தரலாம் என்றும் சலசலக்கப்பட்டது..எனினும், அதிமுகவில் பெற்ற ஒரே எம்பி வேட்பாளர் ஓபிஆர் இருக்கும்போது, வைத்திலிங்கத்துக்கு மட்டும் எப்படி தருவது என்ற குழப்பமும் ஏற்பட்டது.

அமைச்சர் பதவி
இப்படிப்பட்ட சூழலில் எம்பி ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்க இருப்பதாகவும், இது தொடர்பாக பாஜக மேலிடத்திலிருந்து ஒருவர், விரைவில் சென்னைக்கு வந்து பேசப்போவதாகவும் தகவல் கசிந்து வருகிறது.. டெல்லியை பொறுத்தவரை, வரும் ஜூலை மாதம் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க ஒரு திட்டம் உள்ளதாக தெரிகிறது..

ஐடியா
அவ்வாறு, மாற்றி அமைக்கப்படும் அமைச்சரவையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரும் எண்ணமும் ஐடியாவும் உள்ளதாம்.. அந்த வகையிலேயே ஓபிஆர் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான சாத்திய கூறுகள் நிறைய உள்ளதாக கூறுகிறார்கள். அதேபோல, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரைக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் தர பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை
இதற்கெல்லாம் காரணம், அதிமுக கூட்டணியை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைமை நினைக்கிறதாம்.. மேலிட தலைவர்கள் விரைவில் இதுசம்பந்தமாக சென்னை வர உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல்தான் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எதை தொட்டாலும் சறுக்கி சறுக்கி விழுந்து கொண்டிருந்த ஓபிஎஸ்ஸுக்கு நல்ல தகவல் கிடைத்துள்ளதால், தற்போது குஷியில் இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்..!












Click it and Unblock the Notifications