டிவிட்டரிலாவது 31ம் தேதி புதுக் கட்சியை அறிவிப்பாரா ரஜினி.. துரத்தும் 'அழுத்தம்'
சென்னை: டிசம்பர் 31ம் தேதி திட்டமிட்டபடி நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி துவக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டுள்ளது. டிவிட்டரில் அதை அறிவித்தால் கூட போதும் என்று அவருக்கு அழுத்தம் தரப்படுகிறதாம்.
ஹைதராபாத் நகரில் 'அண்ணாத்த' திரைப்பட விழாவில் பங்கேற்றபோது ரஜினிகாந்துக்கு, ரத்த அழுத்த ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். எனவே ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 31ம் தேதி கட்சி துவங்கும் அறிவிப்பு வெளியாகுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்போது ரஜினி தரப்பிலிருந்து சில தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன.
ராகவேந்திரா கல்யாண மண்டபம்
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து, ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரை ஊர்வலமாக சென்று, அங்கு வைத்து கட்சி அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்போது அது நடக்காது என்று தெரிகிறது. ஒருவேளை அரசியல் கட்சி துவங்குவதற்கான தேதியை அறிவித்தாலும், மதுரையில் வைத்துதான் முதல் அரசியல் கட்சி மாநாட்டை நடத்துவார் என்று ரஜினி தரப்பில் முன்பு தகவல் வெளியானது. ஆனால் அது இப்போது நடக்குமா என தெரியவில்லை.
நடிப்பு பிறகுதான்
ஒரு வாரம் ஓய்வு எடுத்தால் போதும், வேறு எந்த சிகிச்சைக்கும் அவசியமில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே ஒரு வாரம் ஓய்வு எடுத்து விட்டு மறுபடியும் ரஜினிகாந்த் நடிப்பை தொடரப்போகிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், பொங்கலுக்கு பிறகு சூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என்று, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த்துக்கு நெருக்கடி
ரஜினிகாந்தை ஒருவாரம்தான் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாலும், ரஜினிகாந்த் ஆக்டிவாகத்தான் உள்ளார் என்பதாலும், அவர் அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்று விரும்ப கூடியவர்கள், கட்சி துவங்குவதில் உங்களுக்கு எந்த குழப்பமும் தேவையில்லை என்று ரஜினிகாந்த்தை வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
டுவிட்டரில் அறிவிப்பு
கொரோனா இரண்டாவது அலை பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மக்களை கூட்டி அரசியல் கட்சி அறிக்கையை வெளியிடுவதை தவிர்த்துவிடுங்கள். கொரோனாவை காரணம் காட்டி இதைச் செய்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். டுவிட்டர் வாயிலாக அறிவிப்பை வெளியிடுவதுதான் சரியானதாக இருக்கும் என்று அவர்கள் ரஜினியை வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.
ரஜினிக்கு தர்ம சங்கடம்
டிசம்பர் 31ம் தேதி, கட்சி பற்றி அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தீர்கள். கூட்டத்தை கூட்டி கட்சியின் முடிவை அறிவிக்கப் போவதாக நீங்கள் கூறவில்லை. எனவே, டுவிட்டர் வாயிலாக கட்சி அறிவிப்பை வெளியிட்டால், ஒரு பிரச்சினையும் கிடையாது. அதைச் செய்யுங்கள் என்று, அந்த தரப்பு ரஜினியிடம் வலியுறுத்தி வருகிறதாம். இதனால் உடல்நிலை, சூட்டிங், அரசியல் என பல தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளாராம் ரஜினிகாந்த்.