சபாநாயகர் மேஜைக்கு போன அந்த ஃபைல்.. தமிழகத்தில் திடீரென மீண்டும் ஒரு தேர்தலா? கோட்டையில் பரபரப்பு
சென்னை: அதிமுகவில் மீண்டும் பிளவு பூகம்பம் அடித்து கொண்டிருக்கிறது.. சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சிக்குள் இரு அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கின்றன.. சபாநாயகர், ஆளுநர் என அனைத்து திசைகளிலும் மனுக்கள் பறந்து கொண்டிருக்கின்றன.. கொறடா யார், தகுதி நீக்கம் யாருக்கு, சட்டம் என்ன சொல்கிறது? இந்த கேள்விகளுக்கான விடைகளை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.. 2021-க்கு பிறகு இந்த முறையும் தோல்வி வாய்க்கவே, கட்சிக்குள் புயல் வீச தொடங்கியது.

முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்..தவெக தொடர்பான அரசியல் சூழலில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சண்முகம்-வேலுமணி தரப்பு 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.. இதையடுத்து அந்த 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவி நீக்கப்பட்டுள்ள சூழல் நிலவுகிறது..
பிறகு 2 தரப்பும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தனித்தனியாக மனு கொடுத்து, ஆளுநரையும் சந்தித்து நடவடிக்கை கோருகின்றனர்..
கொறடா யார்? சிக்கல் என்ன?
கொறடா யார் என்பதில்தான் சிக்கல் நடந்து கொண்டிருக்கிறது.. எடப்பாடி தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொறடாவாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.. அவரின் உத்தரவை மீறி 25 பேர் ஆதரவு அளித்ததால், கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என இபிஎஸ் தரப்பு சபாநாயகரை வலியுறுத்துவதாக சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னொருபக்கம் சண்முகம்-வேலுமணி தரப்பு, சி.விஜயபாஸ்கரை தங்கள் கொறடாவாக நியமிக்க சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருப்பதாக சூழல் நிலவுகிறது.. "நாங்கள்தான் உண்மையான அதிமுக, பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்" என்று அவர்கள் வாதிடுகின்றனர்.. எனவே எடப்பாடி தரப்பு 22 பேர் மீதும் கட்சித் தாவல் தடைச்சட்டம் பயன்படுத்த வேண்டும் என அவர்களும் மனு அளித்துள்ளனர்..
சட்டம் என்ன சொல்கிறது?
1985-ல் அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையாக கட்சித் தாவல் தடைச்சட்டம் சேர்க்கப்பட்டது.. ஒரு எம்எல்ஏ கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களித்தாலோ அல்லது வாக்களிக்காமல் இருந்தாலோ தகுதி நீக்கம் நடைபெறலாம் என்று சட்டம் கூறுகிறது..
இங்கு சிக்கல் என்னவென்றால், 10-வது அட்டவணை மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், கொறடா உத்தரவு மற்றும் கட்சி அமைப்பு தொடர்பான அதிகாரம் கட்சியின் சட்ட விதிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.. சில சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி இபிஎஸ் தரப்பின் வாதம் சட்டரீதியாக வலுவாக இருக்கக்கூடும்.. சண்முகம்-வேலுமணி தரப்பின் "பெரும்பான்மை" வாதம் சட்டரீதியாக எந்த அளவு நிலைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது..
அடுத்து என்ன நடக்கும்?
சபாநாயகர் இரு தரப்பு மனுக்களையும் பரிசீலிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.. இதுபோன்ற வழக்குகளில் கோப்புகள் நீண்ட நாள் கிடப்பில் போடப்படுவதே வழக்கம் என அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.. சண்முகம், வேலுமணி தரப்பு நீதிமன்றம் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. 2 தரப்பும் சபாநாயகர், ஆளுநர் என அடுத்தடுத்து சந்திப்புகளை திட்டமிடும் சூழல் நிலவுகிறது..
25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் இடைத்தேர்தல் நடக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன..!!
எப்படிப்பார்த்தாலும், ஒரு கட்சியில் நெருக்கடி வரும்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.. தோல்விக்கு காரணங்களை ஆராய்வதற்கு பதில் அதிகார போட்டியே முன்னிலை பெறுவது, கட்சியின் உள்நிலை நிலைத்தன்மை மற்றும் வாக்காளர் நம்பிக்கையைப் பற்றிய விவாதங்களை அதிகரித்துள்ளது..












Click it and Unblock the Notifications