உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான தி.மு.க. கள ஆய்வு குழு, தனது அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நாளை சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த சூழலில் திமுக கள ஆய்வு குழுவினர் நடத்திய கருத்து கேட்பில், கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பலரும் தங்கள் ஆதங்கத்தையும், மனக்குமுறலையும் கொட்டி உள்ளனர். நடை பெறும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. தனித்து களம் காண வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அதற்கான காரணங்களை ஆராய 38 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்து ஆய்வு நடத்தினார். இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் தமிழ்நாடு முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை அனைவரிடமும் ரகசியமாக கருத்துக்களைக் கேட்டறிந்தனர். இதுதவிர ஸ்டாலினின் ஆலோசனைப்படி, ஆன்லைன் வாயிலாகவும் ஆயிரக்கணக்கான புகார்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன.

இந்தக் கள ஆய்வின்போது, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஒருமித்த கருத்தாக ஒரு விஷயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. கூட்டணி கட்சிகள் பல இடங்களில் திமுகவின் வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை; மாறாக திமுகவின் பலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அவர்களால் கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறலை நிர்வாகிகள் கொட்டியிருக்கிறார்கள். இதன் விளைவாக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், அப்போதுதான் கட்சியின் உண்மையான பலம் என்ன என்பது தெரியவரும் என்றும் திமுக நிர்வாகிகள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கள ஆய்வு அறிக்கையில் பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பத்தை ஏற்று, கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்த மு.க.ஸ்டாலின் அதிரடி திட்டங்களைத் தீட்டியுள்ளார். தற்போதுள்ள 78 அமைப்பு ரீதியான மாவட்டங்களை 117 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதாவது, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களுக்கும் பதவி வழங்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
இது தொடர்பாக திமுகபொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். நாளை (புதன்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வு குழுவினர் தங்களது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக ஒரு வேளை உள்ளாட்சி தேர்தலில் 'தனித்து போட்டி' என்ற வியூகத்தை எடுத்தால், அது தமிழக அரசியலில் அனல் பறக்கும் விவகாரமாகும். கூட்டணி தர்மத்தை விட கட்சியின் வளர்ச்சியே முக்கியம் என திமுக தலைமை முடிவெடுத்தால், அது வரும் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications