மத்திய அமைச்சரவையில் தேமுதிகவிற்கு இடம் கிடைக்குமா.? முதல்ல ரிசல்ட் வரட்டும்.. சுதீஷ் பதில்
சென்னை: பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை தக்க வைத்தால், மத்திய அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறுமா என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் துணைச் செயலாலர் எல்கே சுதீஷ் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு, பிரபல முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளால் அரசியல் களம் பரபரத்து காணப்படுகிறது. கூட்டணி கணக்குகளும் தேசியளவில் மாறும் சூழல் உருவாகியுள்ளது.
கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா தான் ஆட்சியை தக்க வைக்கும் என முடிவுகள் சொல்லப்பட்டாலும், நாளை பிற்பகலுக்கு மேல் உண்மை நிலவரம் சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்து விடும்.
இந்த சூழலில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று டெல்லியில் தனது கூட்டணி கட்சியினருக்கு இரவு விருந்து அளித்தார். இதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ், அன்புமணி ராமதாஸ், எல்கே சுதீஷ் மற்றும் பிரேமலதா உள்ளிட்ட தமிழகத்தை கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
தமிழகத்தை பொறுத்த வரை பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த கூட்டணியில் பாமக 7 தொகுதிகளும், பாஜக 5 தொகுதிகளும், தேமுதிக 4 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டது
எக்ஸிட் போல் முடிவுகளின்படி தேமுதிக ஒரு தொகுதியில் ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அது சுதீஷ் போட்டியிட்ட கள்ளக்குறிச்சியாக இருக்கவே வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி விருந்தில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய சுதீஷிடம் செய்தியாளர்கள், ஒருவேளை பாஜ ஆட்சியை தக்கவைத்தால் மத்திய அமைச்சரவையில் தேமுதிக இடம் பெறுமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய சுதீஷ் இது குறித்து தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின் தான் தீர்மானிக்க முடியும் என்றார். மேலும் மத்திய அமைச்சரவையில் தங்கள் கட்சி இடம் பெறுவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து தான் முடிவு செய்வர் என எல்.கே.சுதீஷ் கூறினார்