மிகப்பெரிய அளவில் நடந்த சேஞ்ச்.. தமிழ்நாடு ஆளுநர் மாற்றம் இல்லை.. ஆர்.என்.ரவி பதவிகாலம் நீட்டிப்பா?
சென்னை: நாடு முழுவதும் 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படவில்லை. எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படுவதாகத் தெரிகிறது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்துள்ள சூழலில் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த ஆளுநர்கள மற்றும் துணை நிலை ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பிரதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்து வரும் நிலையில், அவர் தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, நீண்ட காலத்திற்குப் பின் புதுச்சேரிக்கு புதிய துணை நிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, குஜராத் அரசின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய கே.கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடைசியாக 2021ஆம் ஆண்டில் கிரண் பேடி தான் புதுச்சேரியின் முழு நேர துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்தவர். அதன் பின்னர் தமிழிசை சவுந்தரராஜன், சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரிக்கு ஆளுநராகச் செயல்பட்டனர்.
மாநில வாரியாக புதிய ஆளுநர்கள்:
மகாராஷ்டிரா - சி.பி.ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி - கே.கைலாஷ்நாதன்
தெலங்கானா - ஜிஷ்னு தேவ் சர்மா
ஜார்க்கண்ட் - சந்தோஷ் கன்வார்
ராஜஸ்தான் - ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே
சத்தீஸ்கர் - ராமன் தேகா
பஞ்சாப் - குலாம் சந்த் கட்டாரியா
சிக்கிம் - ஓம் பிரகாஷ் மாத்தூர்
அசாம் - லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா (மணிப்பூர் - கூடுதல் பொறுப்பு)
மேகாலயா - விஜயசங்கர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், தமிழ்நாட்டில் ஆளுநர் மாற்றம் தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. எனவே, ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மத்திய உளவுத்துறையான IB-யில் அதிகாரியாகப் பணியாற்றிய ஆர் என் ரவி, 2019 ஆகஸ்ட் மாதம் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றி இருந்த நிலையில், தமிழக ஆளுநராக 2021-ம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார். நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழ்நாட்டில் மூன்று வருடம் என அவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
தனது பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து அவர் டெல்லியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக ஆளுநராக அவரே தொடர்வார் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய ஆளுநர்கள் நியமன அறிவிப்பில் தமிழ்நாடு இடம்பெறவில்லை.எனவே, ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாகத் தெரிகிறது.
பதவியில் இருக்கும் ஆளுநரை இரண்டாவது முறையாக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை என குறிப்பிட்டுள்ள மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும், அவரை மீண்டும் நியமித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications