பழவேற்காட்டில் 2 படகுகள் மோதி கவிழ்ந்ததில் பெண் பலி.. தடையை மீறி சவாரி செய்ததால் விபரீதம்!
சென்னை: பழவேற்காட்டில் இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்யப்பட்டு வந்தது. படகு சவாரி அப்பகுதி மீனவர்களுக்கு வருமானத்துக்கு வழிவகுக்கும் பெரும் தொழிலாக இருந்தது.
இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு படகு சவாரியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பலியாயினர். இதையடுத்து அங்கு படகு சவாரிக்கு மாவட்ட அரசு தடை விதித்தது.

இதனைத்தொடர்ந்து அங்கு சில காலம் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் தடையை மீறி படகு சவாரி தொடங்கியது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் பழவேற்காட்டு ஏரியில் படகு சவாரி செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 படகுகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஒரு படகில் பயணம் செய்த 16 பேரும் நீரில் மூழ்கினர். ஆனால் அவர்களை அப்பகுதி மீனவர்கள் உடனடியாக ஏரியில் குதித்து மீட்டனர்.
ஆனால் இந்த விபத்தில் மேரி ஜான் என்ற பெண் மட்டும் பலியாகிவிட்டார். இந்நிலையில் தடையை மீறி படகு சவாரி மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications