"தைரியமா இருங்க".. உயிருக்கு போராடியவரை அள்ளி சென்ற எஸ்ஐ லட்சுமி.. கையை அசைத்து நன்றி சொன்ன பாட்டி
வயதான பாட்டியை காப்பாற்றிய பெண் போலீஸ் லட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிகிறது
சென்னை: உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வயதான பாட்டியை, உடனடியாக அள்ளி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிய பெண் போலீஸ் லட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது கல்லாவி என்ற பகுதி.. இங்கு 88 வயது பாட்டி வசித்து வருகிறார்.. பெயர் சரஸ்வதி.
இவருக்கு மாதா மாதம் பென்ஷன் வருகிறது.. இந்த பணத்தை எடுப்பதற்காக, ஊத்தங்கரை ஸ்டேட் பாங்கிற்கு தன்னுடைய உறவினருடன் பைக்கில் வந்தார்..

விபத்து
பணத்தையும் எடுத்து கொண்டு மறுபடியும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென விபத்தை சந்தித்தார். கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், பைக் திடீரென அங்கிருந்த ஒரு பள்ளத்தில் இடித்துவிட்டது.. இதனால் பைக்கில் இருந்து தடுமாறி பாட்டி கீழே விழுந்துவிட்டார்.. ரத்தம் கொட்டி படுகாயமடைந்தார்...

லட்சுமி
இதை பார்த்த அங்கிருந்தவர்கள், உடனடியாக 108-க்கு போன் செய்தனர்.. ஆனால், ஆம்புலன்ஸ் வர நேரமாகி கொண்டிருந்தது.. மற்றொரு புறம் பாட்டிக்கு ரத்தம் அதிகமாக வெளியேறி கொண்டிருந்தது.. வலியாலும் துடித்து கொண்டிருந்தார் பாட்டி.. அப்போது, ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லட்சுமி என்பவர், அந்த பக்கம் தன்னுடைய வாகனத்தில் கடந்து சென்றார்..

சிகிச்சை
இதை கண்ட பொதுமக்கள், லட்சுமியின் வாகனத்தை தடுத்து நிறுத்தி விஷயத்தை சொன்னார்கள்.. இதனால் பதறி போன லட்சுமியும், உடனடியாக பாட்டியை அள்ளி தன்னுடைய வண்டியில் ஏற்றி கொண்டு, ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்... ஆனால், அங்கு பாட்டியை பரிசோதித்த டாக்டர்கள், அதிக ரத்தம் வெளியேறியதால் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அங்கு எடுத்து சென்றனர்..

பாராட்டு
அப்போது, லட்சுமி காயமடைந்த அந்த பாட்டியிடம் "தைரியமாக இருங்க.. ஒன்னும் ஆகாது" என்றார்.. உடம்பெல்லாம் ரத்தம் வழிந்த நிலையிலும், தன் கையை அசைத்து, லட்சுமிக்கு நன்றி சொன்னார் பாட்டி. மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாட்டி, இப்போது நலமுடன் இருக்கிறாராம்.. இதையடுத்து, பாட்டியின் உறவினர்கள் லட்சுமிக்கு தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.. உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால், உயிரை காப்பாற்ற முடிந்தது என்று கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள். இந்த விஷயம் அறிந்து சக காவலர்களும் லட்சுமிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications