"கும்மிடிப்பூண்டியை தாண்டிட்டா திட்டுனா கூட தெரியாது”.. எல்.முருகன் கொடுத்த அதிரிபுதிரி விளக்கம்!
சென்னை: "கும்மிடிப்பூண்டியை தாண்டிவிட்டால் யாரும் சிரித்துக்கொண்டே திட்டினால் கூட உனக்குத் தெரியாது" என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்ப்பது தொடர்பாகப் பேசியுள்ளார்.

எல்.முருகன் பேசுகையில், "திமுகவைச் சார்ந்த மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மொழி அரசியலை புகுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு இந்தியை மூன்றாவது மொழியாக சேர்க்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையாக இருக்கிறது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூன்று பக்க கடிதத்தில் மிக விளக்கமாக பதில் அனுப்பி உள்ளார். தமிழ் மிக தொன்மையான மொழி; பழமையான மொழி என உலக நாடுகளில் கூறி வருகிறார் பிரதமர் மோடி. திருவள்ளுவருக்கு உலகம் முழுவதும் சிலை அமைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதனை ஐந்து இடங்களில் நிறைவேற்றி உள்ளோம்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு சார்பில், சிங்கப்பூரில் கலாச்சார மையம் அமைத்து, பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் சுமார் 5000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வர வேண்டியது நிலுவையில் உள்ளது. இதற்கு முழு காரணம் உதயநிதி மற்றும் முக ஸ்டாலின் தான். இன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வஞ்சிக்கும் செயல்களை முதலமைச்சர் செய்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? தமிழகத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்சி பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதுபோன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மக்கள் பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குதான் இந்த மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது, இது நவீன தீண்டாமையாக இருக்கிறது.
சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மூன்றாவது மொழியைப் படிக்க மாணவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் பட்டியலின மக்களுக்கும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. யாரும் இந்த மொழியை படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. தமிழ், ஆங்கிலம் அதன் பிறகு மூன்றாவதாக ஒரு மொழி. அது கன்னடம், தெலுங்கு, அசாமி, ஒரியா எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
புதிய தேசிய கல்விக் கொள்கை சர்வதேச அளவில் இன்று இருக்கும் மாணவர்களுக்கு சிறந்த போட்டியாளர்களாக உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. பி.எம். ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அடல் லேப் என்ற பெயரில் தயார் செய்யப்பட இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு மாணவர்களை வஞ்சிப்பதை நிறுத்திவிட்டு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.
திமுகவிற்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது 1965ஆம் ஆண்டு கிடையாது. இன்றைய இளைஞர்கள் முன்னேற்றத்தை நோக்கி, வளர்ச்சியை நோக்கி, சாதிக்க விரும்பும் இளைஞர்கள். அப்படிப்பட்ட இளைஞர்களை பின்னோக்கி இழுத்துச் செல்ல வேண்டாம். அவர்கள் முன்னேறுவதற்கும் வாழ்வு மேம்படவும் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.
ரயிலில் ஏறி கும்மிடிப்பூண்டி தாண்டினால் ஒருவர் திட்டுவது கூட நமக்கு தெரியாது. சிரித்துக்கொண்டே திட்டுவார்கள். ஒரு மொழியை கற்றுக் கொள்வதென்பது, மற்றொரு மொழி மீது பற்றுதல் ஏற்படுத்தும். தமிழ் மொழி போல இன்னொரு மொழி மீதும் மற்று ஏற்படுவதில் என்ன தவறு இருக்கிறது. இன்னொரு மொழியை கூடுதலாக கற்றுக் கொள்வதில் என்ன தவறு?
மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும் வழங்கப்படும் உரிமை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்பட வேண்டும். அதனால் மூன்று மொழி வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் கல்வியிலும் மாணவர்களின் முன்னேற்றத்திலும் அரசியல் செய்வதை திமுக நிறுத்த வேண்டும்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications