சர்வதேச அளவில் தமிழ் எழுத்துருவை அங்கீகரிக்கும் தொழில்நுட்பம் - சென்னையில் நடந்த பயிற்சிப் பட்டறை!
விஐடி பல்கலைக்கழகத்தில் கணினி வழி தமிழை அங்கீகரிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி நடைபெற்றது.
Recommended Video
சென்னை: தமிழ் மொழியை கணினி வழி அங்கீகரிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி அரங்கு சென்னையில் நடைபெற்றது.
தற்போது இணையத்தில் தமிழ் மொழி அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் குறிப்பிட்ட எழுத்துருக்களைத் தவிர மற்ற எழுத்துருக்கள் பொதுவானவைகளாக இல்லாததால், பலசமயங்களில் தமிழில் அனுப்பும் மின்னஞ்சல்களை பெறுபவர்கள் படிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
இதேபோல், தமிழில் உருவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகள் தற்போதைய நிலையில் உலகளவில் பயன்படுத்தும்படியாக இல்லை. இதனால் வேறு வழியின்றி அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் ஆங்கிலத்திலேயே பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் டேட்டா எக்ஸ்ஜென் என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்று புதிய இணைய மென்பொருள் தொழில்நுட்பம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்த அறிமுக மற்றும் பயிற்சிப் பட்டறை சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. ஐஏஎம்ஏஐ ( IAMAI - Internet and mobile association of India) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் பயிற்சி பட்டறையில், இத்துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இது குறித்து ஒன் இந்தியாவிடம் பேசிய டேட்டா எக்ஸ் ஜென் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ஆஷிஷ் மோடி, "ஐடிஎன் (IDN - Internationalised Domain names) எனும் இப்புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் இன்னும் மூன்று மாதத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது குறித்து தான் தற்போது மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
சென்னையில் தான் முதன்முறையில் இதை துவங்கி இருக்கிறோம். விரைவில் பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று இத்தொழில்நுட்பம் குறித்து விளக்க உள்ளோம். தமிழ், கன்னடா, இந்தி உட்பட இந்தியாவில் உள்ள முக்கிய அலுவல் மொழிகளில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
இதன்மூலமாக ஒருவர் நமது தாய்மொழியில் உலகத்தின் எந்தமூலைக்கும் தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். மேலும், பொதுவான எழுத்துரு என்பதால் அந்த மொழியில் எழுதப்பட்ட ஸ்கிரிப்டுகளை தடையில்லாமல் படிக்க முடியும்" என்றார்.
[ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினரானது இந்தியா.. 188 நாடுகள் ஆதரவு!]