தாய்லாந்தில் 'தமிழர் நடுகல்'.. அதென்ன சயாம்- பர்மா ரயில் பாதை? பல்லாயிரக்கணக்கான தமிழர் மாண்டது ஏன்?
சென்னை: 2-வது உலகப் போரில் சயாம்- பர்மா ரயில் பாதை கட்டுமானப் பணிகளின் போது உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் தாய்லாந்து நாட்டில் தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் தமிழர் நடுகல்லை தமிழ்நாடு அமைச்சர் சிவங்கர், ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா திறந்து வைத்தனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது: "காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்" என்பது தொல்காப்பிய நூற்பா!

நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு!
இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றும் 'நடுகல் விழா' தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் இதற்கென 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர் சிவசங்கர் மற்றும் எம்.எம்.அப்துல்லா
எம்.பி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்!
போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி, உழைப்பாக உயிரையே ஈந்து மடிந்த இந்தத் தமிழர்களும் நாம் போற்றி வணங்கத்தக்க வீரர்கள்தான்! அவர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே தாய்லாந்து தமிழர்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் இந்த நடுகல் முயற்சி! இவ்வாறு முதல்வர்ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சயாம்- பர்மா ரயில் பாதை என்பது என்ன?: மரண ரயில் பாதை என சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பெற்றிருப்பதுதான் தாய்லாந்தின் சயாம்- பர்மா (மியான்மர்) இடையேயான ரயில் பாதை. 2-வது உலகப் போர் காலத்தில் 1942-ல் தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானியர்கள் கை ஓங்கி இருந்த காலம். அப்போது தாய்லாந்து எனும் நாட்டையும் அன்றைய பர்மா எனும் இன்றைய மியான்மர் நாட்டையும் இணைக்க 415 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை ஜப்பான் தொடங்கியது. இதுதான் சயாம்- பர்மா ரயில் பாதை திட்டம் என்றழைக்கப்படுகிறது. இந்த ரயில் பாதைக்கான பணியில் பல லட்சக்கணக்கான தென்கிழக்கு ஆசியாவில் வசித்த தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். போர்க்கைதிகளாக இருந்த தமிழர்களும் சயாம்- பர்மா ரயில் பாதை பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

சயாம்- பர்மா ரயில் பாதை கட்டுமானப் பணியின் போது ஜப்பானியர்களால் தமிழ் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள் சொல்லி மாளாதவை. அத்தனை கொடூரங்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டன. பசியோடும் பட்டினியோடும் திறந்த வெளிச் சிறைச்சாலையில் சிக்கியவர்களாக தமிழர்கள் சயாம்- பர்மா ரயில் பாதை திட்டப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பெரும் பெரும் பாறைகளை இயந்திரங்கள் இல்லாமலேயே தகர்த்து காட்டாறுகளில் பாலங்கள் கட்டி முடித்தனர். ஆனால் இந்த கட்டுமானப் பணிகளில் ஜப்பானியர்களின் ஈவிரக்கமற்ற கொடூரத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டு போயினர். இந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாறு மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றளவும் ஆறாத பெரு ரணமாய் இருக்கிறது. இத்தமிழர்களின் நினைவாகத்தான் தற்போது தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் தாய்லாந்தில் நடுகல் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications