2 வாரம் விடாது அடித்த மழையால் சிதைந்த வயநாடு.. மழை தொடருமா? தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
சென்னை: வயநாட்டில் 2 வாரங்களுக்கு இடைவிடாமல் பெய்த கனமழையின் மோசமான நிலை முடிந்துவிட்டது என்றும் மழை குறைய தொடங்கியிருப்பது மீட்பு பணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதேபோல் சென்னையில் இன்று இரவில் இருந்தே இடி மின்னலுடன் மழை பெய்தவற்கான நேரம் தொடங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அப்போதிருந்தே அங்கு கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஆரம்பத்தில் மழை இல்லாமல் இருந்தது. கடந்த ஒரு மாதமாக தான் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வயநாட்டில் நிலச்சரிவு: கேரளாவின் வயநாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு எற்பட்டது. வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில் நள்ளிரவிலும் மழை நிற்காமல் பெய்தபடி இருந்தது. இதனால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன் தொடர்ச்சியாக நிலச்சரிவும் ஏற்பட்டது.
123 பேர் பலி: இன்று அதிகாலை 2 முறை சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, மேட்டுப்பட்டி, சூரல்மலை உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன. சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்த நிலச்சரிவு ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கின. இந்த வீடுகளில் சிக்கிய 1,000-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகளில் கேரளா மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை 123-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
வெதர்மேன் குட் நியூஸ்: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு நாடு மழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வயநாட்டில் கடந்த இரு வாரமாக தொடர்ந்து மழை பெய்த நிலையில், தற்போது மழை குறைய தொடங்கியிருப்பதாக தமிழ்நாடு வெதர் மேன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
வயநாட்டில் மழை குறைந்துள்ளது. இன்னும் சிறிதளவு மழை பெய்யும். எனினும், 2 வாரங்களுக்கு இடைவிடாமல் பெய்த கனமழையின் மோசமான நிலை முடிந்துவிட்டது. மழை குறைய தொடங்கியிருப்பது மீட்பு பணிகளுக்கு உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளை பொறுத்தவரை இன்று இரவில் இருந்தே இடி மின்னலுடன் மழை பெய்தவற்கான நேரம் தொடங்கிவிட்டது" என்றார். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில் தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. வெப்பம் சற்று தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications