உயிருக்கு போராடும் தந்தை மீதான பாசம்... ஆசி வாங்க ஸ்டான்லி மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்
Recommended Video
சென்னை: உயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசி பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதேஷ் (60). வெல்டராக பணியாற்றி வந்த இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் , பிரகாஷ், சரவணன், சதீஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இதில் சதிஷுக்கு திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்த சித்ராவுடன்திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் 15-ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
இடுப்புக்கு கீழ் அகற்றப்பட்ட நிலை
இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சுதேஷ் மீது ரயில் மோதியது. இதில் ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
முடியாமல் போய்விடும்
இந்த நிலையில் அவருக்கு இன்று ஏதோ ஒரு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் சதீஷ் மனவேதனை அடைந்தார். இந்த அறுவை சிகிச்சையின் போது ஏதும் அசம்பாவித சம்பவம் நடந்துவிட்டால் தனது தந்தை கண் முன்னே தனது திருமணம் நடக்காமலும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க முடியாமலும் போய்விடுமோ என எண்ணினார்.
இரு வீட்டார் சம்மதம்
இதனால் தனது தந்தை இருக்கும் போதே அவர் கண் முன் திருமணத்தை நடத்த தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
நெகிழ்ச்சி
இதையடுத்து சதீஷ் நேற்ரு இரவு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விநாயகர் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் சித்ராவின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர் தந்தையிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினார். இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.