யூடியூபில் பெண்கள் மீது வன்மம், குமட்டும் ஆபாசம்! பிரியாணி மேன் அபிஷேக் ரபி சென்னையில் கைது
சென்னை: யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி இன்று சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர் நேற்றைய தினம் தனது யூடியூப் லைவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக 3 மணி நேர வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு ரிவ்யூ செய்யும் இர்ஃபான், டெய்லர் அக்கா உள்ளிட்டோரை பிரியாணி மேன் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் அபிஷேக் ரபி. யூடியூபர்கள் எளிதில் பிரபலமடைவதற்காக ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் யூடியூபர்களை அவதூறாக பேசி இவர்கள் பிரபலமடைவது. இதனால் இவர்களது ஆதரவாளர்களும் மோதிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் பிரபல யூடியூபரான இர்ஃபானை தனது வீடியோவில் பிரியாணி மேன் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு இர்பானின் கார் விபத்தில் சிக்கியதில் மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். அப்போது அந்த காரை இர்பான் ஓட்டவில்லை என்றும் அவருடைய உறவினர்தான் ஓட்டினார் என்றும் சொல்லப்பட்டது.
அது போல் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருந்த போது இர்பான் துபாயில் தனது குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை யூடியூபில் வெளியிட்டிருந்தார். இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இர்பானின் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிறகு சுகாதாரத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இந்த விஷயத்தையும் கார் விபத்து விஷயத்தையும் கையில் எடுத்த பிரியாணி மேன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு இர்பானும் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அது போல் டெய்லர் அக்கா என்ற யூடியூப் சேனலில் டெய்லரிங் குறித்த பதிவுகளை பெண் ஒருவர் வெளியிட்டு வருகிறார். இவர் பிளவுஸ் தைத்து கொடுப்பதை பிரியாணி மேன் ஆபாசமாக வீடியோ வெளியிட்டிருந்தார். அது போல் எப்போதும் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பது, செம்மொழி பூங்கா குறித்து ஆபாசம் கொப்பளிக்க பேசியிருந்தார்.
இதனால் பிரியாணி மேனை பலர் விமர்சித்திருந்தார்கள். இதையடுத்து அவர் யூடியூப்பில் நேரலையில் தற்கொலை செய்து கொள்வது போல் ஒரு வீடியோவை போட்டு தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன்தான் என சொல்லிக் கொண்டே தற்கொலைக்கு முயன்றார். அப்போது நெட்டிசன்கள் அவரது தாயை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியதும், அவர் போய் காப்பாற்றியுள்ளார்.
சுமார் 3 மணி நேரமாக லைவில் அவர் இது போல் செய்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications