கொரோனா பரவலை முன்வைத்து மதமோதலை ஏற்படுத்தும் பேச்சு- மாரிதாஸ் மேலும் ஒரு வழக்கில் கைது!
சென்னை: கொரோனா பரவலை முன்வைத்து மதமோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் நெல்லை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை முன்வைத்து மாரிதாஸ் சமூக வலைதளங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன், மதுரை போலீசில் புகார் கொடுத்தார்.
இதனடிப்படையில் மதுரை மாநகர போலீசார் மாரிதாஸ் மீது, 124-A, 153-A , 504, 505 (1) b, 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அப்போது அவரை கைது செய்யவிடாமல் பாஜகவினர் தடுக்க முயற்சித்தனர்.
பின்னர் ஒருவழியாக மாரிதாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார். மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். பாஜகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு நல்ல பாடத்தை கற்று இருக்கும்.. மாரிதாஸ் மீதான வழக்கு ரத்துக்கு அண்ணாமலை வரவேற்பு!
போர்ஜரி வழக்கு
பின்னர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி விவகாரத்தில் போர்ஜரி ஆவணங்கள் தயாரித்த வழக்கில் மீண்டும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். இதனிடையே தம் மீதான முதல் வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மாரிதாஸ் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ் மீதான முதல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் ஒரு வழக்கில் கைது
ஆனால் போர்ஜரி ஆவணங்கள் தொடர்பான வழக்கில் மாரிதாஸ் தொடர்ந்து சிறையில் உள்ளார். இவ்வழக்கில் மாரிதாஸ் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் தற்போது மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மேலும் ஒரு வழக்கில் மாரிதாஸை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாரிதாஸ் பேசியது என்ன?
கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ ஒன்றில், இந்தியாவில் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என பேசியிருந்தார். இந்த பேச்சு, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டுகிறது; சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்துகிறது என நெல்லை மாவட்ட தமமுக தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
பாளை சிறையில் அடைப்பு
இதனடிப்படையில் நெல்லை மேலப்பாளையம் போலீசார் இவ்வழக்கில் இன்று மாரிதாஸை கைது செய்தனர். இன்று கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸ், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கபட்டார். அவரை டிசம்பர் 30 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.