சென்னைக்கு வந்த TTF வாசன்..யூட்யூப் பிரபலத்தால் நடந்த களேபரம்..ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்ற போலீசார்
சென்னை : பல ஊர்களுக்கு பைக்கில் பயணம் செய்து வீடியோக்கள் பதிவிடும் யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னைக்கு வந்தபோது அவரைப் பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் கலவரம் போன்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக ஜீப்பில் அழைத்துச் சென்று விட்டனர்.
Recommended Video
TTF வாசன் தற்போது தமிழகத்தில் மிகப் பிரபலமான யூடியூபர் ஆவார். பைக் மற்றும் பயண காதலரான இவருக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளமானோ உள்ளனர்.
தன்னுடைய யமஹா இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றி அதை வீடியோ எடுத்து தனது யூட்யூப் சேனல் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

TTF வாசன்
ஆரம்பத்தில் இவர் தனது பைக்கை எடுத்துக்கொண்டு சின்னச்சின்ன ஊர்களுக்கு சென்று வீடியோ எடுத்து பதிவிடுவார். இவர் ஒரு தடவை 'லடாக்' சென்று வந்த வீடியோ தான் இதுவரை பைக் ரேஸ் மற்றும் மிக நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் நபர்களிடையே பிரபலமாக்கியது. டிடிஎஃப் வாசனை இன்ஸ்டாவிலும் ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர். அவரது யூடியூப் சேனலை சுமார் 1.8 மில்லியன் நபர்களுக்கு மேல் பின் தொடர்ந்து வருகின்றனர்.

யூடியூப் பிரபலம்
இந்த நிலையில் தற்போது கோவையில் இருந்து நேபாளம் வரும் வரை பைக்கிலேயே பயணம் செய்ய திட்டமிட்ட வாசன், சென்னையில் உள்ள பிரபல விளையாட்டு பொருள் விற்பனை செய்யும் கடைக்கு வருவதாக தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து அவரை சந்திப்பதற்காக அவரது ரசிகர்கள் அங்கு காத்திருந்த நிலையில் சொன்னதைப் போலவே இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினார் வாசன்.

பெரும் பரபரப்பு
அவரை பார்க்கவும் செல்பி எடுக்கவும் உற்சாகத்தோடு ரசிகர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு உருவானது. மேலும் குறுக்கும் மறுக்கும் ஓடிய ரசிகர்கள் செய்த கலாட்டாவால் அங்கு கலவரம் நடப்பது போன்ற சூழல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் எவ்வளவு முயன்றும் அவர்களை அங்கிருந்து விரட்ட முடியாததால் வேறு வழியின்றி வாசனை போலீசார் தங்களது ஜீப்பில் அழைத்துச் சென்று பாதுகாப்பாக வேறு இடத்தில் இறக்கி விட்டனர்.

போலீசார் கைது?
இந்த நிலையில் வாசன் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரல் ஆனது. தொடர்ந்து பல யூடியூப் சேனல்கள் வாசன் கைது செய்யப்பட்டதாகவும் அவரது தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பி வந்தன. இந்த நிலையில்தான் போலீசார் டிடிஎப் வாசனை கைது செய்யவில்லை எனவும் அவரை பாதுகாப்பாக வேறு இடத்தில் கொண்டு சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து நிலையில், பைக்கரை பார்ப்பதற்கு திரண்ட கூட்டத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications