அமலாக்கத்துறை என் மீது உள்நோக்கத்துடன் வழக்கு போட்டிருக்கு.. ஜாபர் சாதிக் வழக்கு.. இன்று விசாரணை
சென்னை: ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கடத்தியதாக கைதான ஜாபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த கைதை எதிர்த்து ஜாபர் சாதிக் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் டெல்லி போலீஸார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்திய சோதனையின் அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து நியூசிலாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ம் தேதி கைது செய்தனர்.
ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார், அவர் அந்தப் பணத்தில்தான் 'மங்கை' என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் கூறினார்.
இதனிடையே கடந்த 4 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தார்கள். இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜாபர் சாதிக் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த மனுவில் அவர் கூறுகையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த மே 8-ம் தேதி முதல் மே 10-ம் தேதி வரையிலும், ஜூன் 25 மற்றும் 26-ம் தேதிகளிலும் என்று 5 நாட்கள் என்னிடம் விசாரித்தார்கள். அவர்களது விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பும் வழங்கினேன். விசாரணைக்கு அழைத்து சென்ற 5 நாட்களில் என்னிடம் 2 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தினர். ஜூன் 26-ம் தேதி மாலை 4.30 மணி வரை எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல், விசாரணைக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்று கூறி, அன்றே என்னை கைது செய்தனர்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கு என் மீது உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். நான் எந்தவிதமான சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை. எனவே, என்னை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு தடை விதிக்கவேண்டும். என்னை அமலாக்கத்துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்" என்று ஜாபர் சாதிக் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி ஜாபர் சாதிக்கின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications