கொத்து கொத்தாக சிக்கிய டாஸ்மாக் குடிமகன்கள்.. இறங்கி அடித்து சம்பவம் செய்த கோவை போலீஸ்
கோவை: கோவையில் கடந்த 3 நாட்களில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 178 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவோர் மீது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "கோவையில் மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையிலான 3 நாட்கள் போலீசார் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையில் 126 இரு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர்ரக கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக அனைத்து மதுபானக்கூட உரிமையாளர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தினோம். அப்போது மதுபானக் கூடங்களுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்ப செல்லும் போது வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மதுபானக்கூடத்திற்கு மது அருந்த வருவோர், தங்களின் வாகனத்தை இயக்க டிரைவருடன் வருவதை மதுபான கூட உரிமையாளர் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மது அருந்திய நபரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து செல்ல மாற்று வாகனத்துடன் டிரைவரை ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது நம்பகமான டிரைவர் மூலம் மது குடித்த நபரை அவருடைய சொந்த வாகனத்திலேயே வீட்டில் விட்டு வர மதுபானக் கூடம் சார்பாக ஏற்பாடு செய்ய வேண்டும். மது குடிக்க வருபவர்கள் வேறு ஏதேனும் போதைப்பொருட்களை உபயோகிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
அனைத்து மதுபானக்கூடங்களின் உள்ளும், வெளிப்புறத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மதுபானக்கூடங்களில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மதுபானக்கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவோர் மீது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளது. எனவே மது அருந்திவிட்டு மோட்டார் வாகனத்தை அறவே இயக்கக்கூடாது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதனிடையே மதுபானக்கூடத்திற்கு மது அருந்த வருவோர், தங்களின் வாகனத்தை இயக்க டிரைவருடன் வருவதை மதுபான கூட உரிமையாளர் உறுதிசெய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மது அருந்திய நபரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து செல்ல மாற்று வாகனத்துடன் டிரைவரை ஏற்பாடு செய்ய வேண்டும் எனறு வெளியிட்ட கோவை போலீசாரின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒரு தரப்பும், இன்னொரு தரப்போ இதெல்லாம் சாத்தியமே இல்லை என்றும் கூறுகிறார்கள். அதேநேரம் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க , ஒவ்வொரு டாஸ்மாக் வாசலில் ஒரு போலீசாரை நியமித்து கண்காணிக்கலாம் என்றும் சிலர் வலியுறுத்துகிறார்கள். இதன் மூலம் விபத்து ஏற்படுதையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுதையும் தடுக்க முடியும் என்று யோசனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications