அடுத்தடுத்து வரும் லஞ்சப் புகார்.. கோவையில் சிக்கிய 3 வனக் காப்பாளர்கள்.. இப்படி ஆகிடுச்சே
கோவை: கோவையில் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோவையில் கோழிக் கழிவுகளை ஏற்றிச் சென்ற வாகன ஓட்டிகளிடமிருந்து லஞ்சம் வாங்கிய 3 வனக் காப்பாளர்களை இன்று கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் கோவை வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக காய்கறிகள், கோழி இறைச்சி, முட்டைகள், பிராய்லர் கோழிக்கான உணவுகள், கோழியின் கழிவு எரு ஆகியவை தினம்தோறும் கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார்காடு பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் கோவை தடாகத்தை அடுத்த மாங்கரை சோதனை சாவடியை கடந்து மலைப்பாதை வழியாக ஆனைகட்டியை அடைந்து, பின்னர் அங்கிருந்து கேரளாவிற்குள் சென்று வருகின்றன. இதையொட்டி கோவை மாங்கரை பகுதியில் ஒரு வனத்துறை மற்றும் காவல்துறை சோதனை சாவடியும், ஆனைகட்டியில் இரு மாநில எல்லையில் சோதனை சாவடிகளும் இயங்கி வருகின்றன.
இந்த வழியாக செல்லும் லாரி ஓட்டுனர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் மற்றும் வனத்துறையினர் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுக்கரையைச் சேர்ந்த நபர் அட்டப்பாடியில் உள்ள தனது தோட்டத்துக்கு கோழி எருவை ஏற்றிச் சென்றபோது லஞ்சம் வாங்கிய 3 வனக் காப்பாளர்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கரையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் அட்டப்பாடியில் தோட்டம் வைத்துள்ளார். அந்த தோட்டத்திற்கு கோழி எருவை ஏற்றி செல்லும் போது மாங்கரை, மற்றும் ஆனைகட்டி சோதனை சாவடியில் பணியில் இருந்த வனக் காப்பாளர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிருஷ்ணசாமி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து, இன்று காலை 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட போது மாங்கரை சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய வனக் காப்பாளர் செல்வகுமார், ஆனைகட்டி சோதனை சாவடியில் வனக் காப்பாளர்கள் சதீஷ்குமார், சுப்பிரமணி ஆகியோர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினர்.
இதையடுத்து, மூன்று பேரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அதிரடி சோதனை காரணமாக சோதனை சாவடி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சோதனையின் முடிவில் மூவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனக் காப்பாளர் லஞ்சம் வாங்கி போலீசாரிடம் சிக்கியுள்ள நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications