மலைக்க வைத்த மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு! ஷாரிக்குடன் தொடர்பு? டீச்சரிடம் 60 மணி நேரம் விசாரணை!
கோவை : மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு தொடர்பாக சிக்கிய முகமது ஷாரிக் கோவையில் தங்கி இருந்த விடுதியில் பக்கத்து அறையில் இருந்த தனியார் பள்ளி ஆசிரியரான சுரேந்தரிடம் சுமார் 60 மணி நேரம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஓடும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என கர்நாடக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரித் என்பவரின் மொபைல் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். முகமது ஷாரித் ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

முகமது ஷாரித்
அவர் கடந்த 2021 ஜூலை மாதம் ஜாமீனில் விடுதலையானார். முகமது ஷாரித் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் நவம்பர் மாதம் 4ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தகவலின் அடிப்படையில் முகமது யாசின், முஜ் முனீர் என்ற இருவரை கர்நாடக காவல் துறை கைது செய்ததாக கூறப்படுகின்றது. இந்த வழக்கிலும் முகமது ஷாரித்தை கர்நாடக மாநில போலீசார் தேடி வந்தனர்.

கோவையில் முகாம்
இந்நிலையில் ஜாமினில் வந்த பின் தலைமறைவாக இருந்த முகமது ஷாரித் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற லாட்ஜில் கடந்த செப்டம்பர் மாதம் வந்து தங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அங்கு தங்கியிருந்த தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் உதகையை சேர்ந்த சுரேந்திரனை சந்தித்தாகவும் கூறப்படுகின்றது.

ஆதார் எண்
காந்திபுரத்தில் தங்கி இருந்த விடுதியில் பக்கத்து அறையில் தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தரிடம் பழகி அவருடைய ஆதார் ஆவணத்தை வைத்து சிம் கார்டு வாங்கி இருப்பதும் ஆனால் அந்த சிம் கார்டில் இருந்து கோவை உட்பட எந்த பகுதிக்கும் பேசவில்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது

ஆசிரியர் சுரேந்திரன்
இந்நிலையில் சுரேந்திரனை உதகை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகமது ஷாரிக்கிற்கும், தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த சுரேந்தரிடம் 60 மணி நேரம் விசாரணை நடத்தினர். 2 நாட்களாக ரகசிய இடத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதையடுத்து, நேற்றிரவு போலீசார் சுரேந்தரை அவரது இல்லத்தில் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications