கோவையில் வெண்டிலேட்டர் வழியாக ஓட்டலில் புகுந்த திருடன்.. கல்லா பெட்டியில் காத்திருந்த ட்விஸ்ட்
கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஸ்டேட் வங்கி சாலையில் வெண்டிலேட்டர் வழியாக நுழைந்து தனியார் ஓட்டலில் மர்ம ஆசாமி ஒருவர் திருட வந்துள்ளார்.. இருட்டில் கிடந்த கல்லா பெட்டியை கண்டுபிடித்தவர், அங்கிருந்ததை பார்த்து கடும் ஆத்திரம் அடைந்திருக்கிறார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால்... திருடர்கள் அதற்கான வழிகளை தேடுவார்கள்.. அப்படி தேடி கண்டுபிடித்து செல்லும் அவர்கள், அதற்காக பல்வேறு சவால்களை எதிர்கொள்வார்கள். உதாரணத்திற்கு வின்னர் படத்தில் வருவது போல் மாட்டினால் வெளுத்துவிடுவார்கள். அடி உதைக்கு நடுவில் போலீசில் சிக்கி சின்னாபின்னமாகிவிடுவார்கள்.

திருடர்கள் ஒருமுறை சிக்கிவிட்டால் போதும்.. அவர்களை அடுத்தடுத்து எளிதாக போலீஸ் கைது செய்துவிடும். அதேநேரம் திருடர்களை பொறுத்தவரை திருட போன இடத்தில் ஒன்றும் இல்லாமல் போனால் கடுப்பாகி அந்த இடத்தையே ரணகளமாக்கிவிடுவார்கள்.. அப்படித்தான் கோவையில் நடந்துள்ளது.
கோவையில் ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதி 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் பகுதியாகும். இதன் அருகில் தான் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, தீயணைப்பு நிலையம், அரசு கலைக் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை என ஒரே ஏரியாவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஸ்டேட் வங்கி சாலையில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த ஓட்டலில் கடந்த மே 22-ந் தேதி இரவு வேலை முடிந்து ஊழியர்கள் வழக்கம் போல் ஓட்டலை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் ஓட்டலின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறார்.
பின்னர் இருட்டில் கல்லாப்பெட்டி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து அதில், பணம் இருக்கிறதா? என தேடி தேடி பார்த்து உள்ளார். ஆனால் அதற்குள் பணம் ஏதுமே இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த திருடன், அங்கிருந்த பொருட்களை தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மறுநாள் காலையில் ஓட்டலை திறந்தபோது, திருட்டு முயற்சி நடந்ததை கண்டு திடுக்கிட்ட ஓட்டல் உரிமையாளர் ஹிகார் (வயது 51) ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் மர்ம ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பலத்த பாதுகாப்பையும் மீறி நள்ளிரவில் வெண்டிலேட்டர் வழியாக ஓட்டலுக்குள் புகுந்து திருடன் திருட முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications