கோவைக்கு இதுதான் ரியல் நல்ல செய்தி.. ஏங்க வைத்த சிறுவாணி தண்ணீர்.. மாவட்ட நிர்வாகம் அதிரடி
கோவை: கோவை மாநகருக்கு சிறுவாணியில் இருந்து வரும் ஆகஸ்டு மாதம் வரை தண்ணீர் எடுக்க முடியும் என்றும், பில்லூர் 3-வது திட்டம் மூலம் கூடுதல் குடிநீர், கோவைக்கு வழங்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக சிறுவாணி அணை இருக்கிறது. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

அங்கிருந்து கோவை மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுவதும் வழக்கம்.
இந்நிலையில் கோவை மாநகரம் இந்த முறை கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. கோவை மற்றும் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இந்த முறை போதிய மழை பெய்யவில்லை.. இதனால் சிறுவாணி அணை அடியோடு வறண்டு போகும் அளவிற்கு மாறி உள்ளது. தற்போது மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வருகிறது. தற்போதைய நிலையில் பில்லூர் 3-வது திட்டம் மூலம் கூடுதல் குடிநீர் கோவைக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது..
இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- "சிறுவாணி அணை பராமரிப்பு பணிகளுக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 11.1.2023 மற்றும் 3.5.2023 ஆகிய தேதிகளில் முறையே ரூ.3 கோடி மற்றும் ரூ.2 கோடி கேரள அரசுக்கு வழங்கப் பட்டு உள்ளது.
சிறுவாணி நீரோடையில் எந்தவித அடைப்பும் ஏற்படுவது இல்லை.தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 868.75 மீட்டராக உள்ளது. அணையின் கடைசி நீர் இருப்பு நிலை அளவிலான 863.40 மீட்டர் வரை இரு மாநில ஒப்பந்தத்தில் குடிநீர் எடுக்க அனுமதி உள்ளது. சிறுவாணி பகுதியில் மண் படிவு என்பது மிகவும் சொற்ப அளவே உள்ளது.
கேரள நீர்ப்பாசனத்துறை நீர் எடுக்கும் வால்வை கட்டுப்படுத்தி உள்ளதால் நாள்தோறும் 40 எம்.எல்.டி. லிட்டர் அளவு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இது 102 நாட்களுக்கு அதாவது ஆகஸ்டு 8-ந்தேதி வரை இதே அளவுக்கு சீராக வழங்க முடியும். எனவே சில தகவல்கள் வெளியானது உண்மைக்கு புறம்பானது.
தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புதிதாக செயல்படுத்தப்பட்டு உள்ள பில்லூர் 3-வது திட்டத்தின் மூலம் 30 முதல் 40 எம்.எல்.டி. வரை கூடுதலாக குடிநீர் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே கோவை மாநகர மக்களுக்கு பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் போதிய அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications