கோவை கமிஷனர் ஆபீசில் பரபர ஆலோசனை கூட்டம்.. ஏடிஜிபி அருண் தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்பு!
கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என்றும் பணிச்சுமையோ, குடும்ப பிரச்சனையோ காரணமல்ல என்றும், விஜயகுமார் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. காவல்துறை இறுதி மரியாதை நிகழ்வில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலும் பங்கேற்றார். அதோடு 6 கி.மீ தூரம் நடைபெற்ற டிஐஜி விஜயகுமார் இறுதி ஊர்வலத்தில் ஐ.ஜி-க்கள், டி.ஐ.ஜி-க்கள், எஸ்.பிக்கள் என 20 க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் டிஐஜி விஜய்குமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. டிஐஜியின் பாதுகாவலர் ரவிச்சந்திரனின் வாக்குமூலமும் அந்த முதல் தகவல் அறிக்கையில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கோவை மண்டலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications