கோவையில் பதற்றம்- அமித்ஷாவே திரும்பிப் போ! காங்கிரஸ், திவிக இன்று கறுப்பு கொடி காட்டும் போராட்டம்!
கோவை: இந்தி மொழி திணிப்பு; தமிழ்நாட்டுக்கான நிதி தர மறுப்பு; அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய பேச்சு உள்ளிட்டவைகளுக்கு கண்டனம் தெரிவித்து கோவை வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தினர் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகை தருகிறார். கோவையில் சிவராத்திரி நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார் அமித்ஷா. இதனைத் தொடர்ந்து கோவையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட பாஜக அலுவலகங்களை நாளை திறந்து வைக்கிறார் அமித்ஷா.

இதனிடையே கோவை வருகை தரும் அமித்ஷாவுக்கு இன்று கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பது; மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கான நிதியை தர மறுப்பது உள்ளிட்டவைகளுக்குக் கண்டனம் தெரிவித்து இன்று கோவையில் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம், அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

கோவையில் ஹோப் காலேஜ் சிக்னல், மசக்காளி பாளையம் மெயின்ரோடு பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தினர் அமித்ஷாவுக்கு கறுப்பு காட்டும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்தப் போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications