என்டிஏவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. அமித்ஷாவுடன் பேசியது என்ன? அண்ணாமலை கொடுத்த பதில்!
கோவை: அமித்ஷா, நட்டா உள்ளிட்டோருடன் உள்ளரங்கில் பேசிய விஷயங்களை பொது வெளியில் பேச முடியாது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று கூறிய அண்ணாமலை, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்தது நட்பு ரீதியிலானது என்று கூறியுள்ளார்.
அண்மையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதன்பின் டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதனால் என்டிஏ கூட்டணிக்கு ஓபிஎஸ் மற்றும் தினகரன் வருகிறார்களா என்ற கேள்வி எழுந்தது.

அதேபோல் நயினார் நாகேந்திரன் மறுபக்கம் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த சூழலில் டிசம்பர் 15ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வர உள்ளார். இதனால் விரைவில் என்டிஏ கூட்டணி விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்தது நட்பு ரீதியிலானது. டிடிவி தினகரன் எனது சொந்த ஊருக்கு வரும் போது இரவு உணவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதனால் வந்தார். மற்றபடி என்டிஏ கூட்டணியில் யார் இணைய வேண்டும், யார் இணையக் கூடாது என்பதற்கு தேசிய தலைமை முடிவு எடுக்கும்.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள். என்னை பொறுத்தவரை என்டிஏ கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்கு வராமல் இருக்கின்றன. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் இணையாமல் இருக்கிறார்கள்.
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த முரணும் இல்லை. அமித்ஷா, நட்டா, நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூட்டணி தொடர்பாக சரியான நேரத்தில் பேசுவார்கள். என்னுடைய விருப்பத்தை உள்ளரங்கு கூட்டத்தில் சொல்ல முடியும். இவர்கள் வந்தால் என்ன நடக்கும், வரவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை சொல்லலாம். ஆனால் முடிவு எடுக்கக் கூடிய இடத்தில் நான் இல்லை.
அதேபோல் தமிழ்நாட்டில் 3வது அணி வெல்ல வேண்டும் என்றால், அது எளிதான விஷயமல்ல. 2வது இடத்தை கூட விட்டுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பார்கள். கேரளாவில் அப்படி அதிகமாக நடக்கிறது. 3வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு எளிதாக செல்ல முடியாது. அதனால் கிராஸ் வோட்டிங் அதிகம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications