Anusha Ravi: பாஜகவில் MLA சீட் கேட்கும் அனுஷா ரவி.. எந்த தொகுதி தெரியுமா? நயினார் சொன்ன பதில்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் தயாராகி விட்டது. இந்த நிலையில் தான் கமல்ஹாசனின் மநீமவில் இருந்து பாஜகவில் இணைந்த அனுஷா ரவி சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதற்காக ஒரு தொகுதியை குறி வைத்துள்ள அவர் இது தொடர்பாக பாஜகவிடன் பேசி அந்த தொகுதியினை உறுதி செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அதிமுக - பாஜக கூட்டணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சிய பிடிக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் வேலை செய்து வருகிறார்கள். தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வருகிறது.

அனுஷா ரவி
அதே சமயத்தில் கோவில் தொகுதிகளை குறிவைத்து பாஜக தொகுதிப் பட்டியலை தயார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பாஜக விளையாட்டு பிரிவு மாநில நிர்வாகியாக உள்ள அனுஷா ரவி திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட தயாராகி வருவதாகவும், இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் நீதி மய்யத்தில் மாநில அளவிலான பொறுப்பு வகித்த அனுஷா ரவி கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதையடுத்து கமல்ஹாசனின் கட்சி செயல்பாடுகள் மீது அதிருப்தியடைந்த அவர், மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த போது அவரது அழைப்பை ஏற்று பாஜகவில் இணைந்தார்.
நயினார் நாகேந்திரன் என்ன சொன்னார்
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் என்ஜினியரிங் கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அனுஷா ரவிக்கு பாஜகவில் விளையாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் பதவி தரப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் திருப்பூர் தெற்கு தொகுதியிலோ அல்லது கோவையில் ஒரு தொகுதியிலோ வேட்பாளராக களமிறங்க காய் நகர்த்தி வருகிறாராம் அனுஷா ரவி.
மேலும் இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தனது விருப்பத்தை தெரியப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதற்கு நயினாரும் பாசிட்டிவான பதிலையே அளித்திருக்கிறாராம்.
அதிமுகவிடம் இருந்தும் கிரீன் சிக்னல்
தேர்தல் செலவை பற்றிக் கவலைப்படாதவர் என்பதால், அதிமுக - பாஜக கூட்டணியில் கொங்கு மண்டல பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் அனுஷா ரவி போட்டியிட மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் கிரீன் சிக்னல் காட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக எதிர்பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்?
நேற்று முன் தினம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடி எட்டப்படாத நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது. பாஜக 30+ தொகுதிகளை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications