கேட்க நாதி இல்லை.. நாங்க இஸ்லாமுக்கு மாற போறோம்.. அதிர வைக்கும் மேட்டுப்பாளையம் தலித்துகள்!
300 இந்துக்கள் இஸ்லாம் மதம் மாற முடிவு செய்துள்ளனர்
கோவை: "கேட்க நாதியற்ற நிலையில்தான் தாழ்த்தப்பட்டவர் நிலை உள்ளது.. நாங்க எல்லாரும் இஸ்லாத்துக்கு மாற போறோம்.. சுயமரியாதையை காப்பாற்றி கொள்ளவே நாங்க இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கோம்.." என்று 3000 தலித்துக்கள் இஸ்லாம் மதம் மாற போவதாக திடீரென அறிவித்துள்ளனர்.
போன 2-ம் தேதி.. மேட்டுப்பாளையம்.. நடூர் ஆதிதிராவிடர் காலனியில் நடந்த துயரத்தை யாராலும் மறந்துவிட முடியாது. அன்றைய தினம் அதிகாலையில் பெய்த கனமழையால் 20 அடி உயர கருங்கல் சுவர் அருகில் அப்படியே சாய்ந்து பக்கத்தில் இருந்த வீடுகளின் மீது விழுந்தது.. இதில் நான்கு வீடுகளும் தரைமட்டமாயின.
எல்லாமே கூரை வீடுகள்.. வீட்டுக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்கள் அப்படியே மண்ணோடு மண்ணாகி போனார்கள். மொத்தம் 17 பேரை அந்த ஒத்த சுவர் காவு வாங்கிவிட்டது. தமிழக மக்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அளவுக்கு இந்த சோகம் நீடித்து கொண்டே இருக்கிறது.

தமிழ்புலிகள் கட்சி
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.. மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கே சென்று பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.. அதேபோல, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரும் கடந்த 2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் கொதித்து போய் கண்டனங்களை பதிவிட்டனர்..

நாகை திருவள்ளுவன்
இதையடுத்து, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் உட்பட 25 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் இவர்கள் வெளியே வந்தனர்.. ஆனால் மறுநாளே நாகை திருவள்ளுவன் மீது கல்வீச்சு சம்பவத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆலோசனை கூட்டம்
இந்த சமயத்தில்தான், பல்வேறு தரப்பு கண்டனங்களுக்கு இடையில்.. அந்த சுவற்றுக்கு சொந்தமான சிவசுப்பிரமணி கைதானார்.. ஆனால், சுவரின் ஓனர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றுவிட்டார்.. ஆனால், நீதி கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன் இன்னமும் சிறையில்தான் உள்ளார்.. எனவே தமிழ் புலிகள் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். தமிழ் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இளவேனில் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

எதிர்ப்பு
அப்போது, சுவர் இடிந்து 17 பேர் இறந்தும், அதற்கு காரணமானவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்த அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். மேலும் இதற்காக நீதி கேட்டு போராடிய தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் இன்னமும் ஜெயிலிலேயே உள்ளதற்கும் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

3000 பேர்
கேட்க நாதியற்ற நிலையில்தான் தாழ்த்தப்பட்டவர் நிலை உள்ளது என்றும், கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தமிழ்புலிகள் அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. இதனால் சுயமரியாதையை காப்பாற்றி கொள்ளவும், தங்களது பாதுகாப்பை முன்னிட்டும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் கிட்டத்தட்ட 3000 பேர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவெடுத்துள்ளனர். இது சம்பந்தமாக வரும் ஜனவரி 5-ம் தேதி மதம் மாற போவதாகவும் நாள் குறிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications