கோவையில் பட்டுப்புடவை வியாபாரம்.. ஒரே பொய்யில் 3.5 கோடி குவித்த பெங்களூர் தம்பதி.. ஏமாற்றியது எப்படி
கோவை: கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பட்டுப்புடவை வியாபாரம் செய்வதாக கூறி மாந்திரீகம் செய்து ரூ.3.5 கோடி மோசடி செய்ததாக பெங்களூர் தம்பதி மீது புகார் அளித்தனர். ஒரு பொய்யை உண்மை என்று ம்பி பல தவணைகளில் லட்சக்கணக்கான ரூபாயை அளித்துள்ளதாக மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மக்களின் ஆசையை தூண்டி பணம் பறிப்பது காலம் காலமாக தொடர்கிறது. ஒரு வருடத்தில் பணம் இரட்டிப்பாகும். ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 10 ஆயிரம் தருவதாக கூறுவது, அதை உண்மை என்று நம்ப வைக்க சில மாதங்கள் 10 ஆயிரம் 10 ஆயிரம் கொடுப்பது, அதன்பின்னர் பல ஆயிரம் பேரை சேர்த்துவிட வைத்து மொத்தமாக பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடுவது என சதுரங்கவேட்டை பாணியில் மோசடிகள் அடிக்கடி நடக்கின்றன.

அண்மையில் கூட சேலத்தில் இப்படி ஒரு மோசடி நடந்தது. கோவையிலும் கடந்து ஆண்டு எம்எல்எம் பாணியில் மோசடி நடந்தது. வாங்கும் பணத்திற்கு பொருளை கொடுப்பதுடன், மாதம் மாதம் அவர்களுக்கு பணம் தருவது என மோசடி நடந்து கொண்டே இருந்தது. அதை ஒரு கட்டத்தில் கண்டுபிடித்து சிலர் சமூக ஊடகங்களில் தெரிவிக்கவே உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கோவையில் பட்டுப்புடவை வியாபாரம் செய்வதாக கூறி மாந்திரீகம் செய்து ரூ.3.5 கோடி மோசடி செய்ததாக பெங்களூர் தம்பதி மீது பொதுமக்கள் புகார் அளித்தனர்.
கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரை சந்தித்து புகார் மனு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறும் போது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அமோஸ்ராஜ் குமார், அவரது மனைவி நிர்மலா ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் எங்களை சந்தித்து பேசினார்கள். அப்போது அந்த தம்பதி, கர்நாடகாவில் பட்டுப்புடவை வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களுக்கு பெரிய ஆர்டர் இருப்பதாகவும், அதற்காக பணம் தேவை என்றும் பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார்கள்.
இதனை உண்மை என்று நம்பிய கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்த நாங்கள் அவர்களிடம் பல தவணைகளில் லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்தோம். கோவை பகுதியில் உள்ள எங்களது உறவினர்களிடமும் பட்டுப் புடவை வியாபாரத்தில் முதலீடு செய்ய பணத்தை கொடுக்க சொன்னோம், அவர்கள் கொடுத்த பல லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டனர். ஆனால் 2 பேரும் எங்களிடம் பணத்தை பெற்று விட்டு உறுதியளித்தபடி லாபத்தொகை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்கள்.
வெளிநாட்டில் இருந்து சரக்கு வந்து துறைமுகத்தில் இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்தார்கள்.15 பேரிடம் ஒட்டுமொத்தமாக ரூ.3.5 கோடிக்கும் மேல் மோசடி செய்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறையும் எங்களிடம் தவணை தொகை வாங்க வரும்போது ஒருசிலருக்கு கைகளில் மாந்திரீகம் செய்து கயிறு கட்டி பணம் பெற்று மோசடி செய்திருக்கிறார்கள். எங்களிடம் பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்" என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications