ஓடிவந்த வானதி.. கண்ணீர் மல்கிய குஷ்பு.. கோவை பிரச்சார களத்தில் நெகிழ்ச்சி
கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு ஆதரவாக குஷ்பு அங்கு பிரச்சாரம் செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்து திரும்பிய வானதி, குஷ்புவை பார்க்க பிரச்சார களத்திற்கு சர்ப்ரைசாக வந்துள்ளார். அவரைப் பார்த்து குஷ்பு உணர்ச்சிவசத்தில் கண்ணீர் மல்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் அவருக்கு மேலும் தொற்று ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக வானதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

வானதிக்காக குஷ்பு பிரச்சாரம்
வானதிக்கு ஆதரவாக அவரின் கணவர் சீனிவாசன், மகன்கள் என்று மொத்த குடும்பத்தினரும் பிரச்சாரம் செய்தனர். மேலும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், கஸ்தூரி உள்ளிட்ட பலர் வானதிக்காக கோவை வடக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தனர்.
உடல்நலம் சீரானதால் வானதி நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். வீடு திரும்பிய சில நிமிடங்களிலேயே அவர் பிரச்சாரத்திற்கு கிளம்பினார். அண்ணாமலையுடன் பிரச்சாரம் செய்தார் வானதி. மேலும் வானதிக்கு ஆதரவாக பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு நேற்று இரவு வெங்கட்டாபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
உணர்ச்சிவசத்தில் கண்ணீர்
அப்போது குஷ்பு பேசும்போது, "வானதி அக்கா கோவையின் மகள். நான் கோவையின் மருமகள். கோவை தெற்கு தொகுதியில் அவர் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். கோவை வடக்கு தொகுதியிலும் அவர் நிறைய திட்டங்களை நிறைவேற்றுவார். பெண்களுக்காக குரல் கொடுப்பார். அவரை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று பேசினார்.
குஷ்பு பேசிய சில நிமிடங்களில் அங்கு வானதி சீனிவாசன் திடீரென வருகை புரிந்தார். வானதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் குஷ்பு மட்டுமே பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. வானதியின் வருகையை எதிர்பாராத குஷ்பு, உணர்ச்சிவசப்பட்ட குஷ்பு கண்ணீர் மல்கினார். வானதியை இறுக கட்டி அன்பை வெளிப்படுத்தினார்.
வானதிக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து குஷ்பு அவரை கைப்பிடித்து பிரச்சாரத்திற்கு அழைத்து சென்றார். குஷ்புவின் அன்பால் வானதி நெகிழ்ந்தார். இந்த காட்சி அங்கு இருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications