ஓஹோ.. அப்படி வர்றாராமே! நட்டா கொளுத்திப்போட்ட வெடி.. ‘டாப்’பிலேயே சலசலப்பை ஏற்படுத்த பிளானா?
கோவை : கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, "திமுக குடும்பக் கட்சி, குறிப்பாக முதல் குடும்பத்திற்கான கட்சி மட்டுமே, ஸ்டாலினின் சகோதர சகோதரிகளுக்குக் கூட அங்கே இடமில்லை" எனப் பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. திமுகவை வாரிசு அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், நட்டாவின் இந்தப் பேச்சு, ஸ்டாலின் குடும்பத்திற்குள்ளேயே வெடி கொளுத்துவதாக அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி ஓரங்கட்டப்பட்டதையும், தங்கை கனிமொழிக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதையும், ஸ்டாலினின் மகன் உதயநிதி தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுவதையும் விமர்சிப்பதாக ஜேபி நட்டாவின் பேச்சு அமைந்துள்ளது என்கிறார்கள்.
பொதுவாக எதிர்க்கட்சிகள், திமுகவை குடும்பக் கட்சி என்று விமர்சிப்பது வாடிக்கை. ஆனால், ஜேபி நட்டா, குறிப்பாக 'முதல் குடும்பத்தின் கட்சி' என பாயிண்ட் அவுட் செய்திருக்கிறார். இதன் மூலம், முதல்வரின் குடும்பத்திற்குள்ளேயே குடும்பத்திற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தில் மாற்றமா? நோ சான்ஸ்.. பகல் கனவில் பாஜக.. பிரதமர் மோடி, ஜேபி நட்டா மீது வைகோ ‛அட்டாக்’
அந்த 2 சீட் 'அல்டிமேட்’ டார்கெட்.. கன்பார்ம் போல! “மக்கள் சேவகன் தேவை”.. குறிவைத்து பேசிய அண்ணாமலை!
கோவையில் நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவை வந்தார். பாஜக மாநில நிர்வாகிகளிடம் கலந்துரையாடிய ஜேபி நட்டா, பின்னர் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கோவை, நீலகிரி தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டமாகவே இந்தப் பொதுக்கூட்டம் அமைந்தது. இந்த 2 தொகுதிகளிலும் இருந்து பாஜக எம்.பிக்கள் டெல்லி செல்லவேண்டும் என்று இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
முதல் குடும்பத்தின் கட்சி
இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், "இந்திய நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பான கரங்களில் இல்லை. திமுக ஒரு பிராந்திய கட்சி இல்லை, அது ஒரு குடும்ப கட்சி. பிராந்தியத்திற்கும் திமுகவிற்கும் சம்பந்தமே இல்லை. திமுக குடும்பக் கட்சி. அதிலும் குறிப்பாக முதல் குடும்பத்திற்கான கட்சி மட்டுமே. அந்தக் குடும்பத்தில் மற்றவர்களுக்கு இடமில்லை. ஸ்டாலின் சகோதர, சகோதரிகளுக்கே அங்கே இடமில்லை" எனப் பேசினார்.
DMK - விளக்கம் கொடுத்த நட்டா
மேலும், "DMK என்றால் 'Dynasty, Money making, Katta panchayat' செய்வது மட்டுமே. இதுதான் திமுகவின் அரசியல். நமக்கு தேசம் முதலாவது, கட்சி இரண்டாவது, தன்னலம் என்பது கடைசி தான். ஆனால் திமுகவினருக்கு குடும்பம் முதலாவது, கட்சி இரண்டாவது, தேசம் கடைசி தான். Nation last மட்டுமில்லை, Nation lost" என்று சிலேடையாகவும் பேசினார் நட்டா.
திமுக - காங்கிரஸ் - வித்தியாசம் இல்லை
தொடர்ந்து பேசிய நட்டா, "நாம் ஒற்றுமையை முன்னிறுத்துகிறோம். அவர்கள் பிரிவினை செய்கிறார்கள். தமிழ்நாட்டை தனியாக பிரிக்க வேண்டும் என்கிற கோஷத்தை எழுப்புபவர்கள் ராகுல் காந்தியுடன் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. திமுக கருணாநிதி மற்றும் பிள்ளைகளுக்கான கட்சி, காங்கிரஸ், நேரு மற்றும் பிள்ளைகளுக்கான கட்சி." என்று நட்டா பேசினார்.
ஸ்டாலின் குடும்பம்
திமுகவை வாரிசு அரசியல் கட்சி என்றும், குடும்பக் கட்சி என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிக்கின்றன. அதிலும் குறிப்பாக, 'முதல் குடும்பமான ஸ்டாலினின் கட்சி' என்று நட்டா கவனப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம், கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர மற்றவர்களும் புறக்கணிக்கப்படுவதாக ஒரு விமர்சனத்தை அழுத்தமாக வைத்திருக்கிறார் நட்டா. இதன் மூலம், ஸ்டாலின் குடும்பத்திற்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்த திட்டமிடுகிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மற்றவர்கள் புறக்கணிப்பு
அதாவது, முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் முக அழகிரி, முன்னர் மத்திய அமைச்சராக இருந்த நிலையில், 2014ஆம் ஆண்டிலேயே கட்சியை விட்டு நீக்கப்பட்டார். திமுகவில் ஸ்டாலினின் கை வலிமையாக ஓங்கிய பிறகு மு.க.அழகிரி மீண்டும் உள்ளே வர முடியவில்லை. அதேபோல, ஸ்டாலினின் சகோதரியான கனிமொழி கட்சியின் உயர் அதிகாரங்களுக்கு வர முடியவில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் குறுகிய காலத்திலேயே அமைச்சராகி விட்டார். இதைத்தான் பொடி வைத்துப் பேசியிருக்கிறார் ஜேபி நட்டா என்கிறார்கள்.
ஸ்டாலின் குடும்பம் ஆதிக்கம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்ப வாரிசுகளான மு.க.அழகிரி, கனிமொழி கருணாநிதி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஓரங்கட்டப்பட்டு, ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆதிக்கமே திமுகவில் இருப்பதை விமர்சிக்கும் வகையிலேயே நட்டாவின் பேச்சு அமைந்திருப்பதாக கூறுகிறார்கள். இந்தப் பேச்சின் மூலம், கருணாநிதி குடும்ப வாரிசுகள் மத்தியில் திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் நட்டா என்கிறார்கள்.
எதிர்வினைகளை நொறுக்க
மேலும், திமுக மீது வாரிசு அரசியல் விமர்சனங்களை முன்வைத்தால் மற்ற கட்சிகளிலும் வாரிசுகள் பதவிகள் பெறுவது பற்றி திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். பாஜகவில் இதுவரை பெரிய பொறுப்புகளுக்கு வந்துள்ள தலைவர்களின் வாரிசுகள் பற்றி திமுகவினர் லிஸ்ட் போடுகின்றனர். அதை நொறுக்கும் வகையிலேயே, ஒரே ஒரு குடும்பம் மட்டுமே கட்சியை ஆள்கிறது என்கிற ரீதியில் நட்டா பேசியிருக்கிறார் என்றும் சிலர் கூறுகின்றனர்.