பாஜகவை கண்டு பயப்படும் திமுக.. ‘தவறை தட்டிக் கேட்டவர் கைதா?’ - கொந்தளித்த நாராயணன் திருப்பதி!
கோவை : 'இம்மென்றால் சிறை வாசம், ஏன் என்றால் வனவாசம்' என்ற ரீதியில், தமிழகம் முழுவதும் திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டி தட்டிக் கேட்கும் பாஜகவினரை கைது செய்து சிறையிலடைப்பதா? என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக பேசிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன், இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன் என்கிறது இந்து மதம். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எனக் கேட்டிருந்தார் ஆ.ராசா.
இதற்கு பாஜக கடும் கண்டத்தை தெரிவித்தது. பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "தைரியம் இருந்தால் கோவையில் கால் வைத்துப் பார்" என ஆ.ராசா மற்றும் திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பாலாஜி உத்தம ராமசாமி இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆ.ராசாவுக்கு எதிராக திரண்ட இந்து அமைப்புகள்
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இந்துக்கள் குறித்துப் பேசியது இந்துக்களை இழிவுபடுத்துவதாக இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்தும், அவரை எம்.பி பதவியில் இருந்து நீக்கக் கோரியும் பா.ஜ.க, இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

உத்தம ராமசாமி கைது
இந்நிலையில் பாஜக சார்பில் கோவை பீளமேட்டில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசியதை அடுத்து தபெதிக கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர். பாலாஜி உத்தம ராமசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். திமுக.எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாஜக கண்டனம்
இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையிலும் தரக்குறைவாகப் பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்திய ஆ.ராசாவின் மீது நடவடிக்கை எடுக்காமல் தவறை தட்டிக் கேட்டவரை கைது செய்வது அடக்குமுறை ஆட்சியின் அவலமே.

இம்மென்றால் சிறை வாசம்
தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆ.ராசா பேச்சினை கண்டித்த பல்வேறு பாஜகவினர் கைது செய்யப்படுவது திராவிட முன்னேற்ற கழகம், பாஜகவை கண்டு அஞ்சுவதை வெளிப்படுத்துகிறது என்பதோடு திமுகவின் இந்து விரோத போக்கை வெளிப்படுத்துகிறது. 'இம்மென்றால் சிறை வாசம், ஏனென்றால் வனவாசம்' என்ற ரீதியில், தமிழகம் முழுவதும் திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டி தட்டிக் கேட்கும் பாஜகவினரை கைது செய்து சிறையிலடைப்பதா?

அஞ்சமாட்டோம்
இது தொடர்கதையாகி வருவது மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல். ஆனால், திமுகவின் இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் அராஜக, அடக்குமுறை ஆட்சி நடத்தும் தமிழக அரசின் முறைகேடுகளை, நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக தொடர்ந்து போராடும்" என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications