உங்களை என்னதான் குளிப்பாட்டி...பாஜக மீதான முதல்வர் ஸ்டாலின் அட்டாக்குக்கு கோவையில் வானதி பதிலடி!
கோவை: பாஜகவினரை சேற்றில் மூழ்கி வரும் உருவம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்ததற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
திமுக தலைவர்கள் மேடையில் எதைப் பேசினாலும் அதை வெட்டி ஒட்டி திரித்து பொய் பரப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., மனுஸ்மிருதியில் சூத்திரர்கள் யார் என்பது என்ன எழுதி இருக்கிறது என விவரித்திருந்தார். ஆனால் தமிழ்ப் பெண்களை ஆ.ராசா, விபச்சாரிகள் என இழிவுபடுத்திவிட்டதாக அப்பட்டமாக திசை திருப்பியது பாஜக. இந்த பொய் பித்தலாட்டங்கள் தொடர்ந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பாஜக பெயரை குறிப்பிடாமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அரசியல் அறம், மானம், நேர்மை துளியும் இல்லாத...பாஜகவை வெளுத்த முதல்வர் ஸ்டாலின்! சரமாரி அட்டாக்
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
முதல்வர் ஸ்டாலின் தமது அறிக்கையில், மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன்பு சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. நாம் சற்று ஒதுங்கிப் போய் நம்முடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம் என குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மதத்தை இழிவுபடுத்தும் திக, திமுக
இந்நிலையில் கோவையில் பாஜகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், முதல்வரின் அறிக்கையை சுட்டிக்காட்டி பதில் அளித்தார். கோவை ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் பேசியதாவது: திமுக ஆட்சியின் ஊழல்களை, இயலாமையை, தவறுகளை பாஜக மக்கள் மன்றத்தின் முன் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கருத்தின் மீது எங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. தி.க.வும் திமுகவும் இன்றுவரை குறிப்பாக ஒரு மதத்தை மட்டுமே விமர்சித்து வருகின்றன. இந்து கடவுள்களை இழிவுபடுத்துவது, அவர்களது நம்பிக்கைகளை கொச்சையாக பேசுவது என அரசியல் லாபங்களுக்காக செய்கின்றனர். தந்தை பெரியார் காலத்தில் இருந்தே இந்து எதிர்ப்பு என்பதை தங்களது கொள்கையின் ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள்.
ஆ.ராசாவால் முடியுமா?
தீண்டாமையை வலியுறுத்துகிற மனுஸ்மிருதியோ அல்லது எந்த நூலோ அதை எதிர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இங்கே இருக்கிறவரை சூத்திரன்.. அங்கே (மதம்) மாறிவிட்டால் சூத்திரன் கிடையாது என்கிறீர்கள். தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை நியமித்து மத்திய அமைச்சராக்கியது பாஜக. ஆனால் ஆ.ராசாவால் திமுகவின் முதல் நாற்காலியில் அமர முடியுமா? என கேட்கிறோம்.
என்னதான் குளிப்பாட்டி..
மாநிலத்தின் முதல்வர் இன்று அறிக்கை கொடுத்துள்ளார். சேறும் சகதியில் இருந்து வந்து சிலிர்த்துக் கொண்டு போகிறவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என அதில் முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். நாங்களும் சொல்கிறோம்.. உங்களை என்னதான் குளிப்பாட்டி எங்க கொண்டு போய் வெச்சாலும் நீங்க மாறப் போறது இல்லை. இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.