அடுத்தவர் பிள்ளைக்கு பெயர் வைக்க அசிங்கமாக இல்லையா! வயிரு எரிஞ்சு சொல்றேன்! அண்ணாமலை திடீர் ஆவேசம்!
கோவை: அடுத்தவர் பிள்ளைக்கு பெயர் வைக்க அசிங்கமாக இல்லையா என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பல இரவுகள் தூங்காமல் கஷ்டப்பட்டு படித்து தாம் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், அதற்கும் கருணாநிதி தான் காரணம் அவர் பேனா மை தான் காரணம் என ஆ.ராசா கூறிவருவது வேடிக்கையாக உள்ளது என ஆவேசம் காட்டினார்.

ஒரு காலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தோர் அதிகளவில் தேர்ச்சி பெற்று வந்த நிலையில், இப்போது வெளிவரும் முடிவுகளில் தமிழர்களை பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டிய நிலை உள்ளதாக அண்ணாமலை அங்கலாய்த்துக் கொண்டார்.
அதுமட்டுமல்ல தாம் வயிரு எரிஞ்சு சொல்றேன் என்றும் எண்ணி இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பார்க்கவே முடியாத நிலை ஏற்படும் என்றும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் இங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் சூழல் வரும் நிலை உள்ளதாகவும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.
கொங்கு வேளாளரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்ததே கருணாநிதி தான் என்றும் அதனால் தான் அண்ணாமலையால் ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆக முடிந்தது என்றும் இல்லையென்றால் அவர் ஆடு தான் மேய்த்துக் கொண்டிருப்பார் எனவும் ஆ.ராசா பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை திடீர் பாய்ச்சல் காட்டியுள்ளார்.
நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பலரும் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வந்தால், கருணாநிதியின் பேனா மையால் தான் அவர் அந்த இடத்துக்கு வந்தார், இவர் இந்த இடத்துக்கு வந்தார் என ஆ.ராசா கூறுகிறார் என அண்ணாமலை நொந்துகொண்டார்.
ஆ.ராசாவின் இது போன்ற பேச்சுக்கள் கேவலமாக உள்ளதாக கூறிய அண்ணாமலை வழக்கத்துக்கு மாறாக சற்று கடுகடுப்புடனே இந்த விவகாரம் குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications