நீங்களே பொய் சொல்லலாமா விஜய் ப்ரோ? சொல்வது ஒன்று.. செய்வது ஒன்றா இருக்கே.. அண்ணாமலை கேள்வி!
கோவை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சொல்வதை தனது வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விஜய் குழந்தைகளுக்கும், விஜய் பள்ளிக்கும் மட்டும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் போது, தவெக தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழிக் கொள்கையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதேபோல் எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் மொழிக் கொள்கையையும், கல்விக் கொள்கையையும் கேள்விக்குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால்.. அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால்.. எப்படி ப்ரோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் திமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் செட்டிங் செய்து வைத்து கொண்டு சோசியல் மீடியாவில் ஹேஷ்டாக் போட்டு விளையாடுவதாகவும் விமர்சித்துள்ளார். இந்த நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மார்ச் முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு அநியாயம் நடப்பதாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான கடிதம் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் போது நிச்சயம் முறையாக நடத்தப்படும்.
விகிதாச்சார அடிப்படையில் 543 தொகுதியில் இருந்து 20 சதவிகிதம் உயர்கிறது என்றால், அதே அடிப்படையில் அனைத்து மாநிலங்களின் தொகுதிகளும் உயரும். அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, யார் தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறைகிறது என்று சொன்னார்கள் என்று கேள்வி எழுப்புகிறோம்.
அதேபோல் தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்துள்ளது. விஜய் பேசும் போது, மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்று இரண்டையும் குற்றம்சாட்டியுள்ளார். உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி.. நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால் தவெக தொண்டர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழி.. விஜய் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும்.
கெட் அவுட் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில 30 நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகி சென்றுவிட்டார். அதற்கான மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது. விஜய்-க்கு ஆலோசனை சொல்லும் பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கையும் அனைவருக்கும் காட்டி கொடுத்துவிட்டது.
அதனால் எங்கேயும், யாரும் மொழியை திணிக்கவில்லை. நீங்களே ப்ரோ என்று சொல்லி பொய் சொல்லலாமா ப்ரோ? பிரசாந்த் கிஷோருக்கு ஒரு கேள்வி. அவர் ஏன் திமுகவை ஆட்சியில் அமர்த்தினார்? அதற்காக மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சனை என்று தெரிவித்தார். மேலும் தவெக விழாவில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications