அமைச்சர் செந்தில் பாலாஜி கைது ஏன்? பின்னணியில் 11 நாடாளுமன்ற தொகுதிகளாமே! டிஆர் பாலு பரபர லிஸ்ட்
கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் 11 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளதாகவும், இதில் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக இத்தகைய செயலை செய்துள்ளதாகவும் பகீர் தகவலை டிஆர் பாலு கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இன்று முதல் 23ம் தேதி வரை 8 நாட்கள் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தற்போது செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தான் அவரிடம் 8 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியின் கைதை முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜியை மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் கைது செய்திருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் செந்தில் பாலாஜி கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கோவை சிவானந்தா காலனியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டிஆர் பாலு எம்பி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கே பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, கொமதேக ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொஹிதீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் டிஆர் பாலு எம்பி பேசியதாவது: செந்தில் பாலாஜி 5 முறை எம்எல்ஏவாகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அமலாக்கத்துறை அவரிடம் அத்துமீறி நடந்துள்ளது. சம்மன் கொடுக்காமல் அவரை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையின்போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் மிக மிக கொடுமையாக நடந்துள்ளனர். இதுபற்றி நீதிமன்றத்தில் நேரம் வரும்போது தெரிவிப்போம்.
சம்பவத்தின்போது உடல் அதிகமாக வியர்த்துள்ளது. இதனால் காற்று வாங்குவதற்காக ஓய்வெடுக்கும் வகையில் வெளியே செந்தில் பாலாஜி சென்றார். சம்ப் மீது அவர் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென அவர் கீழே விழுந்து துடித்துள்ளார். இந்த வேளையில் நடிப்பதாக அமலாக்கத்துறையினர் நினைத்துள்ளனர். மேலும் செந்தில் பாலாஜியின் கால், தலையை பிடித்து தூக்கியுள்ளனர். இந்த வேளையில் தலையை பிடித்து தூக்கியவர் திடீரென விட்டுவிட்டார். இதனால் கான்கீரிட் சிலாப்பில் அவரது தலைமுட்டி அடிப்பட்டுள்ளது. தலையில் காயம்பட்டுள்ளதை வழக்கறிஞர் இளங்கோ, மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும் உறுதி செய்துள்ளனர்.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான விசாரணை இன்னும் நடைபெறவில்லை. ஆனால் 8 நாள் அமலாக்கத்துறை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு இதயத்துக்கு செல்லும் 3 நரம்புகளில் அடைப்புகள் உள்ளது. இதற்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும். இதனால் அவர் சுருண்டு விழுந்து துடிதுடித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மீது பிஎம்எல்ஏ பிரிவில் வழக்கை சேர்த்திருப்பது நியாயமின்றி இருக்கிறது. இந்த பிரிவை சேர்த்தால் ஜாமீனில் வெளியே வர முடியாது. இதற்காக தான் அவர் மீது அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கொங்கு மண்டலத்தில் மிகமிக முக்கிய தலைவராக அடையாளம் காணப்படுபவராக செந்தில் பாலாஜி உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
கொங்கு மண்டலத்தில் மட்டும் 11 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு , கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பழனி, சேலம் உள்பட 11 இடங்கள் உள்ளன. இதனால் தான் தேர்தல் சீனில் இருந்து செந்தில் பாலாஜியை அப்புறப்படுத்த அவரை கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜியை கொங்கு மண்டலத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் ஜெயித்து விடலாம் என பாஜகவினர் கனவு காண்கின்றனர். இது பகல் கனவு. முடவன் தேனுக்கு ஆசைப்படுவது போன்றதாகும். மாறாக செந்தில் பாலாஜியின் செயல்திறனால் அனைவரும் வீழ்த்தப்படுவார்கள்'' என விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications