கோவை அருகே கேரள எல்லையில்.. சில நிமிடங்களில் கோடி ரூபாய் தங்கம் பறிப்பு.. வழக்கில் புதிய திருப்பம்
கோவை: கோவையில் நகைக்கடை உரிமையாளரிடம் 1.25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீஸ் கேரளாவில் முகாமிட்டுள்ளது. தங்க கட்டிகளை கொள்ளையடிக்க பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட கார் கேரளா மாநிலம் வழுக்கல் பகுதியில் தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். நகைக் கடை உரிமையாளர் ஜெய்சன் ஜேக்கப் வந்த இந்த காரில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. வழக்கில் இதுவரை நடந்தது என்ன? என்பதை பார்ப்போம்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல் என்ற கிராமத்தை சேர்ந்த 55 வயதாகும் ஜெய்சன் ஜேக்கப் என்பவர் நகை வியாபாரி ஆவார். அந்தப்பகுதியில் நகைப்பட்டறை மற்றும் நகைக்கடை வைத்திருக்கிறார். இவர் பொதுவாகவே சென்னை சென்று அங்குள்ள நகைக்கடைகளில் இருந்து தங்கக்கட்டிகளை வாங்கி வந்து அவற்றை நகையாக செய்து விற்பனை செய்வது வழக்கமாகும். அதன்படி ஜெய்சன் ஜேக்கப் தனது கடையில் வேலை செய்து வரும் ஊழியரான 20 வயதாகும் விஷ்ணுவுடன் நேற்று முன்தினம் மாலையில் சொகுசு காரில் கோவை வந்தார்.
பின்னர் அவர்கள் சென்னை சென்று, நகைக்கடைகளில் 1.25 கிலோ தங்கக்கட்டிகளை வாங்கிவிட்டு ரயில் மூலம் கோவை திரும்பி வந்தார்கள்.

லாரி வழியை மறித்தது
பின்னர் கோவையில் இருந்து ஜெய்சன் ஜேக்கப் தனது கார் மூலம் திருச்சூர் புறப்பட்டார். காரை விஷ்ணு ஓட்டினார். அவர்கள் நேற்று காலை 7.15 மணியளவில் கோவை-பாலக்காடு ரோட்டில் எட்டிமடையை தாண்டி சென்று கொண்டு இருந்தது. அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது திடீரென்று பின்னால் வந்த லாரி ஒன்று ஜெய்சன் ஜேக்கப் சென்ற காரின் முன்பகுதியில் குறுக்காக நின்று வழிமறித்து நின்று கொண்டது.
காரை சூழ்ந்த கும்பல்
இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு, பிரேக் பிடித்து காரை நிறுத்தினார். அப்போது லாரியில் இருந்து திபுதிபுவென 5 பேர் கொண்ட கும்பல் குதித்து ஜெய்சன் ஜேக்கப் காரை சூழ்ந்தனர். அந்த கும்பல் கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றின் உதவியுடன் கார் கண்ணாடியை உடைத்தது. இதனால் காரில் இருந்த ஜெய்சன் ஜேக்கப் பயத்தில் கத்தில் கூச்சலிட்டுள்ளார். பின்னர் அந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த காரில் ஏறிக்கொண்டது.
1.25 கோடி 24 கேரட் தங்கம் கொள்ளை
நகை பட்டறை உரிமையாளர் ஜெய்சன் ஜேக்கப் கழுத்தில் கத்தியை வைத்த அந்த கும்பல், உன்னிடம் இருக்கும் 1.25 கிலோ தங்கக்கட்டிகளை எங்களிடம் கொடுத்து விடு, இல்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியது. இதனால் பயந்துபோன அவர் காரின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த தங்கக்கட்டிகளை எடுத்து அந்த கும்பலிடம் கொடுத்திருக்கிறார்.
2 கிமீ பயணம்
இதையடுத்து 2 கி.மீ. தூரம் சென்ற பின்னர் ஜெய்சன் ஜேக்கப், விஷ்ணு ஆகியோரை தாக்கியதுடன், ஜெய்சன் ஜேக்கப் கையில் இருந்த ரூபாயை பறித்துவிட்டு காரை நிறுத்தியிருக்கிறார்கள். பின்னர் காரில் இருந்து 2 பேரையும் பிடித்து கீழே தள்ளிவிட்டு அந்த கும்பல் காருடன் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும், சற்றும் தாமதிக்காமல் க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் என காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
1.25 கோடி மதிப்புள்ள தங்கம்
அவர்கள் தங்கக்கட்டிகளை பறிகொடுத்த ஜெய்சன் ஜேக்கப் மற்றும் விஷ்ணு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கக்கட்டிகள் சுத்தமான 24 கேரட் தங்கம் ஆகும். எனவே அதன் மதிப்பு ரூ.1.25 கோடிக்கும் மேல் இருக்கும் என்று ஜெய்சன் ஜேக்கப் கூறியிருக்கிறார்கள். அதில் லாரியை விட்டு இறங்கி தங்க கட்டிகளை கொள்ளையடித்து காருடன் தப்பிச்சென்ற கும்பல், மலையாள மொழியில் பேசியதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை உடனே தொடங்கினார்கள்.
ஐந்து தனிப்படை அமைப்பு
அத்துடன் அந்த கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் கேரளாவின் பல்வேறு இடங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். தப்பி சென்ற கார் மற்றும் லாரி பதிவு எண் மற்றும் லாரி எங்கு சென்றது என்று தீவிரமாக விசாரித்தனர். அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் இந்த காட்சிகள் ஏதும் பதிவாகி உள்ளதா என்பதை ஆராய்ந்தனர்.
கார் சிக்கியது
அந்த கார் கடந்து சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தங்க கட்டிகளை கொள்ளையடிக்க பயன்படுத்திய நகைக் கடை உரிமையாளர் ஜெய்சன் ஜேக்கப் வந்த கார் (கேரள பதிவு எண்), கேரள மாநிலம் வழுக்கல் பகுதியில் தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். அந்த பகுதியிலேயே போலீசார் முகாமிட்டுள்ளனர். கொள்ளையர்கள் விரைவில் சிக்குவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications