வாக்காளர்களுக்கு பணம்.. கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.கவினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை: கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.கவினர் 12 பேர் மீது வழக்கு பதிவு. செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஆறு வாகனங்களை பறிமுதல் செய்து வெரைட்டி ஹால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Recommended Video
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
இதுவரை வெளியான பல்வேறு கருத்துக்கணிப்புகளின் படி கமலுக்கு அதிக ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாஜகவின் வானதி சீனிவாசனுக்கும், கமலுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பிரச்சாரம் அனல்பறக்கிறது. இறுதி கட்ட வாக்குசேகரிப்புகள் நடந்து வருகிறது.
அதிகாரிகள் வழக்கு
இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சலீவன் வீதி பகுதியில் பா.ஜ.கவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கிருந்த பா.ஜ.கவை சேர்ந்த நபர்களை கலைந்து போகும் படி சொன்ன போது, அவர்கள் அதிகாரிகளின் உத்தரவிற்கு கீழ்படியாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
6 வாகனங்கள் பறிமுதல்
இதனையடுத்து அங்கிருந்த பா.ஜ.கவினர் கருணாகரன், சேகர் உட்பட 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 6 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
46 ஆயிரம் பணம்
மேலும் அவர்களிடம் இருந்து 46 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1000 ரூபாய் பரிசு கூப்பன் ,500 ரூபாய் பரிசு கூப்பன், பா.ஜ.க தொப்பிகள், கொடிகள், வாக்காளர் பட்டியல், காசோலைகள், ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உட்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கலகம் செய்தல்
பின்னர் கைது செய்யப்பட்ட 12 பேர் மீதும் அரசு அதிகாரிகள் உத்தரவு கீழ்படியாதது, அத்துமீறுதல், கலகம் செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 12 பேரையும் ஜாமினில் விடுவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 6 வாகனங்கள் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.